Skip to main content

’இவ்வளவு சின்னத்தனமா அரசியல் செய்கிறாரே தினகரன் என்று  என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்!’ - ஓபிஎஸ் பேட்டி

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
o1

 

தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும்,  இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு நாம் இருவரும் இணைந்து ஆட்சி செய்வோம் என்று ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப்போட,  பற்றி எரிந்தது தமிழக அரசியலில்.    எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி,  ஓபிஎஸ் என்னை வந்து சந்தித்தார் என்று கூறினார் தினகரன்.   

இந்த சர்ச்சைக்கு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ்.   அப்போது அவர்,

’’தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்று தினகரன்  உச்சகட்டத்திற்கே சென்று, மிகப்பெரிய மனச்சுமையோடு அலைந்துகொண்டிருக்கிறார்.   
நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.   எதற்காக? அந்த குடும்பத்தின் கீழ் கட்சியும் ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன்.  முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தினகரனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,   தினகரன் இல்லத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு,  இனிமேல் இந்த குடும்பத்தினருடன் எந்தவிட ஒட்டும் உறவும் இல்லை என்று அமைச்சர்கள் அனைவரும் முடிவெடுத்து வெளியேறி வந்துவிட்டார்கள்.   அதற்கு பின்னால் இந்த தினகரன்,  இந்த ஆட்சி இரண்டு நாளில் கலைக்கப்படும்.  கவிழ்ந்துவிடும் என்று விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்று,  இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பல வகையிலும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

 

o4

 

  44 சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறி, தன் இல்லத்திற்கு ஒவ்வொருவராக வருவதை அவரே வெளியிட்டு வந்தார்.  நிலைமை மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறதே.. இதனால் கட்சி மீண்டும் ஒரு  பிளவுக்கு  வந்துவிடுமே என்ற மனக்கவலை எனக்கு வந்தது.   36 சட்டமன்ற உறுப்பினர்களை தினகரன்  காண்பித்து ஆட்சியை கவிழ்த்துவிடுவேன் என்று சொன்னபோது,  நிருபர்கள் எல்லாரும் என்னிடம் வந்து, உங்களால் இந்த ஆட்சி கவிழுமா என்று என்னிடம் கேட்டபோது,  என்னால் ஆட்சி கவிழாது என்று பேட்டி அளித்தேன்.    உடனடியாக தங்கமணியும், வீரமணியும் என்னிடம் வந்து பேசினார்கள்.  அப்போது அவர்களிடம்,  கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுங்கள் என்று எடுத்துச்சொன்னேன்.      நான் உங்களூக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன்.    தினகரனால் இந்த ஆட்சி கவிழ்ந்தது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று சொன்னேன்.    அந்த குடும்பம் கட்சி்யிலும் ஆட்சியிலும் வந்துவிடக்கூடாது என்றுதானே தர்மயுத்தம் நடத்தினீர்கள்.  நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கிறோம். ஆகவே நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றனர்.  கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று அன்று முடிவெடுத்தோம்.

 

இரு அணிகளூம் சேர்ந்தபோது,   நான் மூன்று முறை முதல்வர் ஆக இருந்துவிட்டேன்.   அதுவே எனக்கு போதும்.  கட்சிப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன்.  பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன்.   நாங்கள் இணைகிறோம் என்றதும், தினகரனுக்கு ஆதரவளித்த 36 எம்.எல்.ஏக்களில் 18 பேர் வாபஸ் பெற்றார்கள்.

 

o2


நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்தபோது அண்ணன் எடப்பாடியும் தினகரனும் பிரிந்துவிட்டார்கள். அப்போது தினந்தோறும் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று தினகரன் சபதம் போடுகிறார்.  அந்த சமயத்தில்,  மனம்விட்டு பேசவேண்டும் என்று எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் மூலமாக தினகரன் சொன்னதால்,  அந்த வீட்டில் நானும் தினகரனும் சந்தித்தோம்.   

 

18 பேரை வைத்துக்கொண்டு எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது என்று தரக்குறைவான அரசியலை நடத்த நினைக்கின்ற தினகரன் எதற்கெடுத்தாலும் பொய் பேசுகிறார்.    மனம் திருந்திதான் என்னை சந்தித்து மனம் விட்டு பேசவருகிறார் என்று நினைத்தால்  பேட்டிகளில் அவர் என்ன சொன்னாரே அதையே என்னிடம் ரிபீட் செய்தார்.    எடப்பாடி பழனிச்சாமி அண்ணனை ஆட்சியை விட்டு இறக்கிவிட்டு தான் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தான் பேசினார். எனக்கு தூக்கிவாரிபோட்டது.   அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால்.  நான் வந்துவிட்டேன்.  அதற்கு பின்னால்தான் இந்த நிலை நீடிக்க கூடாது என்று நாங்கள் கூடிப்பேசி இணைந்தோம்.   நானும் தினகரனும் சந்தித்தது 2017ல் ஜூலை 12ம் தேதி.   எடப்பாடி அண்ணனுடன் நான் இணைந்தது செப்டம்பர் 21ம் தேதி.   இதுதான் உண்மை.

 

o3

 

ஏதோ நான் ஒரு கொலைக்குற்றத்தை செய்தது போல நேற்று முதல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.   தினகரனை சந்திக்கச்சொல்லி பலர் என்னிடம் வந்து பேசியபோது,  அந்த குடும்பத்திற்கு எதிராகத்தான் நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.  நீங்கள் அவரையே பார்க்க சொல்கிறீர்களே என்று கேட்டபோது,   அவர் மாறிவிட்டார்.   அரசியலை விட்டே அவர் ஒதுங்கப்போகிறார் என்று சொன்னதால்தான் தினகரனை சந்தித்தேன்.  நேரில் பேச வேண்டும் என்று சொன்னதால் என்ன சொல்கிறார் என்றுதான் கேட்போமே என்பதற்காகத்தான் சந்தித்தேன்.  நல்ல வார்த்தையை சொல்லப்போகிறார் என்றுதான் சந்தித்தேன்.  அரசியல் நாகரீகம் கருதி நான் யாரிடமும் சொல்லவில்லை.  இது என்னுடன் இருந்தவர்களுக்கு கூட சொல்லவில்லை.    அன்று நடந்த இந்த சந்திப்பை இன்று சொன்னால் ஆட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார் தினகரன்.

 

 என்னுடைய சகோதரருக்கும் இந்த சந்திப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  என்னையும் தினகரனையும் சந்திக்க வைத்த  நண்பர் இன்று வந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.  இவ்வளவு சின்னத்தனமா அரசியல் செய்வார் தினகரன் என்று நான் நினைக்கவில்லை.   அப்படி தெரிந்திருந்தால் நான் அவரை சந்திக்க சொல்லி உங்களை வற்புறுத்தியிருக்க மாடேன் என்று மனம் வருந்தார் அந்த நண்பர்.

இதுவரை நான் உண்மைக்கு புறம்பாக எதையும் சொல்லவில்லை.  எனக்கு இருக்கின்ற நல்ல பெயரை கெடுக்கத்தான் அந்த கொடியவர்கள் கூடாரம் சதி செய்துகொண்டிருக்கிறது.    

 

இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசை கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டும் என்ற ஈனத்தனமான வேலை எனக்கு இல்லை.  ஆட்சிக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார் தினகரன்.  நானும் அண்ணன் எடப்பாடியும் இணைந்த பிறகு தினகரன் அணியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை’’என்று ஆணித்தரமாக கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.