Skip to main content

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்... முதல்வரின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன்: மு.க.ஸ்டாலின் கண்ணீர்

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
mkstalin


திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
 

தலைவரின் உடல் அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு பக்கத்தில் கொண்டு போய் அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல, தலைவர் எடுத்த முடிவு. ஆகவே அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நாம் எவ்வளவோ பாடுபட்டோம். 
 

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்களெல்லாம் எங்களிடத்தில் சொல்லுகிறார்கள், இவ்வளவு நேரம்தான் அவருடைய உயிர் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது என சொல்கிறபோது, இனி காப்பாற்றுகிற வழியில்லை. முடிந்தவரை நாங்கள் போராடியிருக்கிறோம். இந்த சூழல் வரக்கூடிய நேரத்தில் நாங்களெல்லாம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
 

சோகத்திலே கண்ணீர் மல்க நாங்கள் மருத்துவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்தாலும், நமது முன்னோடிகளெல்லாம் தலைவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று பேசிக்கொண்டிருந்தபோது, பல நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்திகளை சொல்லி அனுப்புகிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வரக்கூடிய செய்திகள், தலைவர் கலைஞருடைய ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அந்த செய்திகள் வந்து கொண்டிருந்தது.
 

 

 

அதற்கு பிறகு நமது முன்னோடிகளெல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள், நாமாக நேரடியாக முதல் அமைச்சரை சந்திப்போம். சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் நிச்சயம் நிறைவேற்ற வருவார்கள் என்று சொன்னபோது, நான் தயாரானேன். அப்போது நமது முன்னோடிகள் சொன்னார்கள். நீ வர வேண்டாம், நாங்கள் போகிறோம். நீ ஒரு செயல் தலைவர். நீ தலைவருடைய மகன். நீ எக்காரணத்தைக்கொண்டும் வரக் கூடாது. அவர்களை சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில், இல்லை இல்லை என்னுடைய மானம், மரியாதை, கவுரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்க தயார் என்று சொன்ன பிறகு நாங்களெல்லாம் சென்று முதல் அமைச்சரை சந்தித்தோம்.
 

சந்தித்து எங்களுடைய கோரிக்கையை எடுத்து சொல்லுகிறோம். சொல்லுகிறபோது முதல் அமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளில் கொடுக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் லீகல் ஒப்பீனியன் கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள். அப்போது நான் சொன்னேன், அரசு சொல்லக்கூடிய எண்ணத்தைத்தான் அரசு வழக்கறிஞர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம். 
 

இன்னும் கூட வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன். முதல் அமைச்சருடைய கைகளையெல்லாம் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன். தலைவருடைய ஆசை, அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக பார்ப்போம் என்று ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதனை நம்பி நாங்கள் வெளியே வந்தோம். 
 

 

 

மருத்துவமனையில் வந்து அமர்ந்திருக்கிறோம். சரியாக 6.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே சொன்னார்கள். உடனடியாக ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் முன்னோடிகள் சிலரோடு அந்த கடிதத்தை கொடுத்து முதல் அமைச்சர் வீட்டுக்கு அனுப்புகிறோம். முறையாக கேட்க வேண்டும் என்பதற்காக. எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள். அடுத்த 10வது நிமிடத்தில் வந்துவிட்டார்கள். என்ன என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள் என்று அண்ணன் துரைமுருகன் சொல்கிறார்கள். 
 

என்ன செய்வதுதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியில் தலைமைச் செயலாளருடைய அறிவிப்பு வருகிறது. திமுக செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்கு பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கறிஞர் வில்சன் உள்ளே வருகிறார். அவர்களிடத்திலே விவாதித்தோம். நீதிமன்றத்திற்கு செல்லட்டுமா என்று கேட்கிறார். இரவே நீதிபதியை சந்திக்கிறோம். மனு அளிக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள். 
 

 

 

அதற்கு பிறகு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகு மறுநாள் காலை 8 மணி, 8.30 மணிக்கு தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விடுதலை இன்னும் சில நமது கழக வழக்கறிஞர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வில்சனின் தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்கு தீர்ப்பு வருகிறது. அண்ணாவினுடைய சமாதி அருகிலே தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பு வருகிறது. 
 

நாங்கள் தலைவரின் உடலுக்கு பக்கத்தில் இருந்து அழுதுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குக்கூட இந்த செய்தி முதலில் வரவில்லை. ஆனால் எதிரில் திரண்டிருக்கக்கூடிய லட்சக்கணக்கான தோழர்களுக்கு செல்போனில் அந்த செய்தி வந்து அவர்கள் முழங்குகிறார்கள். அதை பார்த்து, அந்த செய்தியை கேட்டு இவ்வளவு பெரிய சோகத்திலே ஒரு சிறிய மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. நமெக்கல்லாம் ஏற்பட்டது. 
 

உள்ளப்படியே எனக்கு நன்றி சொன்னீர்கள். என்னை பாராட்டீனர்கள். என்னைப் பொறுத்தவரையிலே நான் நம்முடைய வழக்கறிஞர்கள் குழுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்த பெருமை சேரும்... சேரும்... 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.