Skip to main content

கர்நாடக தேர்தல்; தலைமைக்கு அதிர்ச்சி தந்த பாஜக எம்எல்ஏ!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

karnataka bjp mla gopala krishna resins issue

 

கர்நாடக சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.

 

பாஜகவை சேர்ந்த குட்லிகி தொகுதி எம்எல்ஏ என் ஒய்.கோபாலகிருஷ்ணா தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2018 தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேர்ந்து  குட்லிகி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் இன்று கோபாலகிருஷ்ணா, சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதற்கு முன்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

 

கோபாலகிருஷ்ணா சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மொலகல்முரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1997, 1999, 2004 மற்றும் 2008 என நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரகல்கூடு தொகுதி எம்எல்ஏ ஏ.டி.ராமசாமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்