Skip to main content

காடுவெட்டி குரு குடும்பப் பிரச்சனையின் பரபரப்பு பின்னணி... பா.ம.க.விற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த முயற்சியா?  

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

pmk


பா.ம.க.வின் முக்கிய பிரமுகரும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவருமான முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் இரண்டாவது நினைவு நாளில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் அஞ்சலி செலுத்தினார். பா.ம.க.வினர் பலரும் அவரவர் இடங்களில் அஞ்சலி செலுத்தினர். அடுத்த நாள், காடுவெட்டியில் குருவின் மகனும் மருமகனும் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வு அதிர்வை ஏற்படுத்தியது.
 


மே 26 ஆம் தேதி இரவு காடுவெட்டியில் சின்னபிள்ளை என்பவரது குடும்பத்தினருக்கும் குருவின் மகன் கனலரசன் தரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது. இதில் கனலரசனுக்கு லேசான காயம். அவரை காப்பாற்ற சென்ற குருவின் மருமகன் மனோஜ்கிரண், அவரது அண்ணன் மதன்மோகனனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ஊர்மக்கள் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் பெரிய விபரீதம் நடந்திருக்கும் என்கிறார்கள். வெட்டுப்பட்டவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் உள்ளனர். ஏன் இந்தத் திடீர் மோதல் எனக் காடுவெட்டியில் நாம் விசாரித்தோம்.
 

pmk


குருவின் சித்தப்பா மெய்யன்பன். இவரும் முன்னாள் இராணுவ வீரராக இருந்துள்ளார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சின்னபிள்ளை என்பவரது சகோதரியைத் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். வாரிசுகள் இல்லாததால், சின்னபிள்ளை குரு இருதரப்புக்கும் மெய்யன்பனின் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதோடு நிலத்திற்குச் செல்லும் பாதை சம்பந்தமாகவும் இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.
 


இதுபோக, பா.ம.க தலைமையின் தூண்டுதலில் தங்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதாக குரு மகன் கலையரசன் குற்றம்சாட்டி, பல அரசியல் தலைவர்களிடமும் முறையிட்டு வந்தார். குருவை போலவே கனலரசனும் தன் பாதுகாப்புக்குச் சில இளைஞர்களைக் கூடவைத்துள்ளார். பெரும்பாலும் தனது அத்தை சந்திரகலா ஊரான பழஞ்சநல்லூரில் தங்கியிருப்பார். சந்திரகலா மகன் மனோஜ்கிரணுக்கு தனது சகோதரி விருத்தாம்பிகையை திருமணம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று கனலரசனின் நண்பர் குறுங்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் காடுவெட்டியில் குரு வீட்டிற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது சின்னபிள்ளை என்கிற சுப்பிரமணியன், இவரது மகன் ஐயப்பன், சின்னபிள்ளையின் தம்பி காமராஜ், இவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் அருண்குமாரை வழிமறித்து அவரது பைக் சாவியைப் பிடுங்கிக்கொண்டு விரட்டியுள்ளனர். இந்தத் தகவலை அருண்குமார் கனலரசனுக்கு செல்போன் மூலம் தகவல் சொல்ல... கனலரசன் தன் அத்தை மகன்களுடன் வீட்டில் இருந்து வெளியில் வந்து சின்னபிள்ளை தரப்பினரிடம் விசாரிக்க, இருதரப்பிற்கும் பிரச்சனை ஆகியுள்ளது. திடீரென்று சின்னபிள்ளை தரப்பினர் அரிவாளால் கனலரசனை வெட்டப்போக, அதை அவரது அத்தை மகன்கள் சூழ்ந்து நின்று தடுக்கும்போது மதன்மோகனுக்குத் தலையில் வெட்டு, கனலரசனுக்கு காலில் அடி. ஊர் மக்கள் ஓடிவந்து இருதரப்பையும் தடுத்துள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் காடுவெட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். இது சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசில் இருதரப்பு புகாரிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சின்னபிள்ளை தரப்பில் சதீஷ்குமார் கனலரசன் தரப்பினரால் சண்டையின் போது காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அரியலூர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 

http://onelink.to/nknapp


இது குறித்து மீன்சுருட்டி போலீசாரிடம் கேட்டபோது, "கனலரசன் கொடுத்த புகார் மீது சின்னபிள்ளை சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் கனலரசன், மதன்மோகன், மனோஜ்கிரண், அருண்குமார் உட்பட ஐந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருண்குமாரை கைது செய்துள்ளோம். வழக்கில் சம்பந்தபட்ட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்'' என்றனர்.

சம்பவத்தன்று மறுநாள் குருவின் தயார் கல்யாணி, மீன் சுருட்டி காவல் நிலையத்துக்கு எதிரெ நின்றுகொண்டு தங்கள் குடும்பத்தை வாழவிடாமல் சதி செய்கிறார்கள் என்றும், அதேபோல் குருவின் சகோதரி செந்தாமரை, எங்கள் குடும்பத்திற்கு எதிராகப் பிரச்சனைகள் உருவாக காரணம் பா.ம.க. தலைமை தூண்டுதல் என்றும் கூறினர். இதுபற்றி பா.ம.க. முக்கிய பிரமுகர்களிடம் கேட்ட போது, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க வளர்ச்சிக்கு குரு அதிக அளவில் உழைத்துள்ளார். அவர்மீது கட்சித்தலைமையும் கட்சிகாரர்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதைக் கெடுக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்காக பா.ம.க. தலைமை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்கிறார்கள் பா.ம.க. முன்னோடிகள்.

காடுவெட்டி குரு சின்ன பிள்ளை குடும்பங்கள் ரத்தஉறவு உள்ளவர்கள். குரு இருந்தவரை அவரோடு நெருக்கமாகவே இவர்கள் அனைவரும் இருந்துள்ளனர். குரு மறைவுக்குப் பிறகு மோதல் போக்கு தலையெடுத்துள்ளது. இவர்கள் பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. பிரச்சனைகள் மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


 

 

சார்ந்த செய்திகள்