
நேற்று ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி தொகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். ராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பழைய ஆடுதொட்டி, சிமிண்ட்ரி சாலை, ஹவுசிங்போர்ட், மேற்கு மாதா கோயில் தெரு, தொப்பை தெரு, ஆதாம் தெரு மற்றும் செட்டி தெரு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ராயபுரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவேன். பழுதடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் சீரமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிமுக வேட்பாளர், காட்டுப்பள்ளி துறைமுகத்தை தனியாருக்குத் தாரை வார்த்துள்ளார். தற்போது நடைபெறும் அதிமுகவின் அடிமை ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைஞர் டிவி இன்றுவரை பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுத்த எந்தப் பொருளும் பயன்பாட்டில் இல்லை. அதிமுக திட்டங்களால் எந்தப் பயனும் இல்லை. எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர் இளைய அருணா, பகுதிச் செயலாளர் சுரேஷ், வட்டச் செயலாளர் புகழேந்தி மற்றும் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.