Skip to main content

“எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்!” -அமைச்சரின் உத்தரவால் தாக்கப்பட்ட தேர்தல் அதிகாரி!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
election

 

“இங்கே எவன்டா தேர்தல் அதிகாரி?”
“என்ன மிஸ்டர்? நான்தான்!”
“என்னாது மிஸ்டரா? அடிடா இவனை..”

திமுதிமுவென்று தேர்தல் அலுவலகத்துக்குள் நுழைந்த ஏழு பேரும் ரவுண்டு கட்டி,  தேர்தல் அதிகாரியை அடிக்க ஆரம்பித்தார்கள்.  அவர், விழுந்தடித்து அலுவலகத்திலிருந்து வெளியே ஓடுகிறார். அவரிடம் காக்கிகள் “என்ன சார்?” என்று கேட்க, “உங்க கண்ணு முன்னாலதான அடிக்கிறாங்க..” என்று அவர் பரிதவிக்க, மேலும் அடி விழுகிறது. காக்கிகள் அந்த 7 பேரைத் தடுக்காமல், தேர்தல் அதிகாரியிடம் “நீங்க கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க..” என்கிறார்கள்.  

 

ராஜபாளையம் அருகிலுள்ள R77 சத்திரப்பட்டி கூட்டுறவு பண்டக சாலைக்கான தேர்தல் நடந்தபோது, அதிமுக அணியின் முத்துகணபதி தலைவராக வேண்டும் என்ற வெறியோடு, குண்டர்கள் 7 பேர் அலுவலகத்துக்குள் நுழைந்து, சேர்களை உடைத்து, தேர்தல் அதிகாரி மான்ராஜை தாக்கிய சம்பவம்தான் மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது. 

pon

 

அதிமுக குண்டர்கள் அத்தோடு விடவில்லை.  அந்தப் பண்டகசாலையின் தலைவராக தொடர்ந்து இருந்து வரும் சிபிஐ கட்சியைச் சேர்ந்த சுந்தரராஜனையும், “நீ எப்படிடா அணி சேர்த்து போட்டியிடலாம்?” என்று  தாக்கினார்கள்.   

 

அதிமுக அணியைச் சேர்ந்த 11 பேரின் பெயர்களை மட்டும் நோட்டீஸில் ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் மிரட்டியும்,  நேர்மையான அதிகாரி என்று சொல்லப்படும் தாசில்தார் மான்ராஜ், நியாயமாகத் தேர்தல் நடத்த முயன்றார். அதனால்தான்,  தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். எல்லாம் முடிந்தபிறகு, கண்துடைப்பாக, காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியது.  சிபிஐ கட்சியைச் சேர்ந்த சுந்தரராஜன்,  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

 

“விருதுநகர் மாவட்டத்தில், அதிமுகவினர் தவிர, டிடிவி தினகரனின் அமமுகவோ, திமுகவோ, காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டோ, வேறு எந்தக் கட்சியினரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. நம்மை மீறி போட்டியிட்டால், என்ன செய்தாவது,  அவர்களை விரட்டியடிக்க வேண்டும். எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று விருதுநகர் அதிமுக மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்ட உத்தரவால்தான், இப்படி ஒரு வெறித்தனமான தாக்குதலை அதிமுகவினர்  நடத்தியிருக்கிறார்கள்.” என்று ஆதங்கத்துடன் சொன்னார்கள் சிபிஐ தோழர்கள். 

 

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தலை இத்தனை கேலிக்கூத்தாக்கி விட்டார்களே!

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.