Skip to main content

அஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என விற்பனை... தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது... ஈஸ்வரன் வேதனை!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

E.R.Eswaran

 

நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றில் அஸ்கா சர்க்கரை கலப்படத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டு சர்க்கரையாக மாற்றப்படுகின்ற அஸ்காவுக்கு அதிக விலை கொடுத்து பொதுமக்கள் ஏமாறுகிறார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

பெரிய சர்க்கரை ஆலைகளில் ரசாயனம் உபயோகித்து வெள்ளை சர்க்கரையாக தயாரிக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரையைப் பயன்படுத்தி வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு சர்க்கரைக்கோ, வெல்லத்திற்கோ மாறி வருகிறார்கள். அஸ்கா தயாரிக்கின்ற ஆலைகளில் சர்க்கரையை வெள்ளை நிறமாக்குவதற்கு பயன்படுத்துகின்ற ரசாயனம் உடம்புக்கு கெடுதல் என்று சுகாதாரம் கருதி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

 

நாட்டு சக்கரை,  வெல்லம் போன்ற பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் குடும்ப நலன் கருதி வாங்குகிறார்கள். ஒரு கிலோ 45 ரூபாய்க்கு அஸ்கா சர்க்கரை விற்கப்படுகின்ற நிலையில் நாட்டு சர்க்கரை உடல் நலனுக்கு நல்லது என்று சொல்லி ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நாட்டு சர்க்கரை தயாரிப்பாளர்கள் விவசாயிகளிடம் கரும்பை வாங்கி கரும்புச்சாறில் இருந்து தயாரிக்காமல், பெரிய ஆலைகளில் அஸ்கா சர்க்கரையை வாங்கி கலப்படம் செய்கிறார்கள்.

 

இது தெரியாமல் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து நாட்டு சர்க்கரையை கடைகளில் வாங்குகிறார்கள். கரும்பு விவசாயிகள் தங்களிடம் தேவையான கரும்பை வாங்காமல் நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது என்று பலமுறை புகார் கொடுத்தும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. நாட்டு சர்க்கரை தொழிலை நம்பி இருக்கின்ற கரும்பு விவசாயிகள் விளைவித்த கரும்பை விற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என்று சொல்லி மூன்று மடங்கு விலைக்கு விற்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்பது வேதனை. நாமக்கல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்கள் நாட்டு சர்க்கரை ஆலைகளில் அதிகாரிகள் துணையோடு நடக்கின்ற முறைகேடுகளை கண்டுபிடித்து சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

 

நாமக்கல் மாவட்ட நாட்டு சர்க்கரை ஆலை அதிபர்களுடைய பிரச்சினை என்னவென்றால் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஆலைகள் அனைத்திலும் ஆய்வு செய்து தவறுகளை சரி செய்தால் தான் சந்தையில் எல்லோரும் ஒரே விலைக்கு விற்க முடியும் என்பது. நாமக்கல்லில் மட்டும் சுத்தமான நாட்டு சர்க்கரை தயாரிக்கப் பட்டால் கலப்படம் செய்கின்ற மற்ற ஆலைகளோடு விற்பனை போட்டியில் தோற்றுப்போவோம் என்பதுதான் அவர்களுடைய ஆதங்கம். இதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய முடியாது.

 

http://onelink.to/nknapp

 

தமிழக அரசு வேடிக்கை பார்த்து  கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் கலப்படம் செய்வதை தடுப்போம் என்று முடிவெடுத்தால் மட்டுமே பிரச்சினை தீரும். தொடர்ந்து பொதுமக்கள் அவர்களை அறியாமலேயே ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த ஏமாற்று வேலைகளுக்கு அரசும் துணை போவது கொடுமை. ஒருபக்கம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் மறுபக்கம் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசினுடைய துரித நடவடிக்கை மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.