Skip to main content

ஆபத்து விலகிவிட்டதா? ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

pmk

 


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 97,581 பேருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வருகின்றது.
 


இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அதைப் போக்குவரத்துக் கழகங்கள் மதிக்காமல் இருப்பது நியாயமல்ல. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவதும் கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முன்வர வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு கரோனா ஆபத்து விலகிவிட்டது என்று பொருள் அல்ல. இப்போது நோய்ப்பரவல் ஆபத்து அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் வழக்கமாக மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்