Skip to main content

“எல்லாத்துக்குமே தனித் தனி ரேட்” - துல்லியமாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Edappadi Palaniswami accurately said, "There is a single rate for everything."

 

திட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்த திமுக இன்று அந்த திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துகிறது. இதுதான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

சேலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர் நாம் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்த திமுக., இன்று அந்த திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். விழாவில் பேசிய அவர், “நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களில் தென்னை மரங்களின் வயதினைக் கணக்கிட்டு பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல் நிலத்திற்கும் தனியாக பணம் வழங்கப்பட்டது. இப்படி இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. நிலத்தில் வீடு இருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு என்னவோ அந்தத் தொகையைக் கொடுத்தார்கள். 

 

இதற்கு முன் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர்.பாலு தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சித் திட்டத்தில் உருவாக்கினார்கள். அப்போது சாலை செல்லும் வழியில் வீடு இருந்தால் அதன் மதிப்பிற்கு குறைவான பணத்தையே கொடுத்தார்கள். 

 

ஆனால் தற்போது வீட்டிற்கு எந்த மதிப்போ அதைத்தான் கொடுக்கிறார்கள். அதில் டைல்ஸ் கிரானைட் மற்றும் மார்பில்ஸ் போட்டு இருந்தால் அதற்கு தனி ரேட். கிணறு இருந்தால் அதற்கும் தனி ரேட். இத்தனையும் இந்த 8 வழிச்சாலை திட்டத்தில் கொண்டு வந்தார்கள். இந்த திட்டத்தால் எரிபொருள் மிச்சமாகும்; 50 கிமீ பயணம் மிச்சம்; நேரம் மிச்சம். இவை அனைத்தையும் கணக்கிட்டு மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அன்றைக்கு திமுக இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியது. இப்பொழுது அவர்கள் அனைவரும் அந்த திட்டத்திற்கு துணை நிற்கின்றனர்.

 

திட்டத்தைக் கொண்டு வந்தபோது எதிர்த்த திமுக இன்று அந்தத் திட்டத்தை நல்ல திட்டம் எனக் கூறி அமல்படுத்துகிறது. இதுதான் திமுக ஆட்சி” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்