Skip to main content

நக்கீரன்  செய்தி எதிரொலி - மூடப்பட்ட அரசுப்பள்ளி சத்தமில்லாமல் திறக்கப்பட்டது

Published on 08/06/2018 | Edited on 09/06/2018
tea

    

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சத்தமில்லாமல் தமிழக அரசு பூட்டிவிட்டது என்பதை சத்தமில்லாமல் பூட்டப்பட்ட அரசுப்பள்ளிகள் என்ற தலைப்பில் 7 ந் தேதி இரவு நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம். அப்போதே அந்த செய்தியை பார்த்த கல்வித்துறை அதிகாரிகள் நள்ளிரவிலேயே ஆலோசனை நடத்தி உள்ளனர். 


இந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வன், வட்டார கல்வி அலுவர் முத்துக்குமார் ஆகியோர் அல்லம்பட்டிக்கு சென்று கடந்த ஆண்டு சத்தமில்லாமல் பூட்டிய பள்ளியை பார்த்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருகில் குளத்தூர் கிராமத்தில் பணியில் இருந்த ஆசிரியை சுப்புலெட்சுமியை தற்காலிக அவசர பணி நிரவலில் அல்லம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு வரவழைத்து பள்ளியை திறக்கச் செய்தனர். திறக்க செய்த அதிகாரிகள் கிராமத்திற்குள் சென்று மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தினார்கள். 


பள்ளியை திறந்த ஆசிரியை பள்ளி வகுப்பறைக்குள் உடைந்து கிடந்த பீரோக்களை சரி செய்து வகுப்பறை முழுவதும் பரவிக் கிடந்த புத்தகம் மற்றும் ஆவணங்களை ஒழுங்கு செய்து பள்ளியில் மாலை வரை இருந்தார். 


இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும் போது.. அல்லம்பட்டி பள்ளி மூடப்படவில்லை. ஆனால் மாணவர்கள் இல்லை. பள்ளியில் இருந்த ஆசிரியையும் இடமாறுதலில் சென்றுவிட்டார். அதனால் மூடப்பட்டது. தற்போது பள்ளியை மீண்டும் திறந்தாகிவிட்டது. மாணவர்கள் இல்லை என்றாலும் விரைவில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை கிராம மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் நலத்திட்டங்கள் பற்றியும், உள்ளுரில் பள்ளி வேண்டும் என்பதை பற்றியும் எடுத்து சொல்லி வருகிறோம். அதனால் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் மாணவர் சேர்க்கையோடு பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றனர். 


மூடப்பட்ட ஒரு அரசுப்பள்ளியை நக்கீரன் செய்தியால் மீண்டும் திறக்கப்பட்ட மனநிறைவு நமக்கு ஏற்பட்டது. இதே போல திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை அரசுப்பள்ளியிலும் மாணவர்களை சேர்த்து தொடர்நது செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதெ நம் விருப்பம். 
    

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.