Skip to main content

நெருங்கும் தேர்தல்; 3 கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி உடன்பாடு?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK constituency agreement with 3 parties

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தேர்தல் அறிக்கை உருவாக்கவும் தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுடன் திமுக இன்றே தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் வர உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று நடைபெற்ற திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுகவின் அர்ஜுன ராஜ் தெரிவிக்கையில், “தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.  இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மதிமுக சார்பில் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்