
மீனுக்கு வீசிய வலையில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று சிக்கிய சம்பவம் சென்னை போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை போரூர் ஏரியில் மீனவர்கள் சிலர் வழக்கம்போல மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மீன்பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் பெரிய அளவிலான பொருள் ஒன்று சிக்கியது. சிக்கிய பொருள் என்னவென்று மீனவர்கள் வலையை இழுத்து பார்த்த பொழுது அழுகிய நிலையில் சடலம் இருந்தது தெரிந்தது.
கைப்பற்றப்பட்ட சடலம் ஆண் என தெரியவந்த நிலையில், உடனடியாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போரூர் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சடலம் ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வயது மதிக்கத்த நபரின் உடல் என்று தெரிய வந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என அடையாளம் தெரியாத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனுக்கு வீசப்பட்ட வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.