Skip to main content
Breaking News
Breaking

‘வெல்லும் ஜனநாயகம்’ - திருச்சியில் வி.சி.க. மாநாடு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
'Democracy wins' - V.C.K. in Conference Trichy. !

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் வரும் 26 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சித் தலைமையின் அகவை 60 மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக நடைபெறவிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 5 லட்சம் பேர் திரளாகக் கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'Democracy wins' - V.C.K. in Conference Trichy. !

இந்த மாநாட்டின் வரவேற்புரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் வழங்குகிறார். மாநாட்டின் நோக்க உரையை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வழங்குகிறார்.

தொடர்ந்து சிறப்பு பேருரைகளைத் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான  ஈ.ஆர். ஈஸ்வரன், சி.பி.ஐ (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆ. ராசா, எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர், சி.வெ. கணேசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சார்ந்த செய்திகள்