Skip to main content

“செயற்குழு முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதே” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

chennai high court judgement admk case

 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்; பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ்,  மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ல் நடத்தப்படும் என நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.  இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், "இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொன்ன பிறகு, இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதுதானே!  அப்படி இருக்கையில் ஏன் இந்த அவரச முறையீடு? " என ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், "ஏப்ரல் 20ல் இறுதி விசாரணை தொடங்கவுள்ள நிலையில், 16 ஆம் தேதி செயற்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. கர்நாடகா தேர்தல், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்க வருகின்றனர். அவர்களின் எண்ணங்களுக்கு ஒத்து வராத உறுப்பினர்களின் கார்டு புதுப்பிக்க மாட்டார்கள்.  புதிதாக சேர்க்க மாட்டார்கள்" என்று முறையீடு செய்யப்பட்டது.  

 

கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், நீக்கப்பட்டுள்ளவர்களிலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்த நீக்கத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் செயற்குழு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பொதுச் செயலாளர் செயல்படத் தடைக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தாலும், அவர் பதவியில் செயல்படும்வரை யாரும் தடுக்கவில்லை என்றும், கட்சி செயல்படுவதையும் தடை  செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

 

அதிமுக தரப்பில், "மனுதாரர்கள் கூறுவதுபோல எதுவும் நடக்காது. ஆறு மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடப்போவதில்லை. தேர்தல் முடிந்து பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.  2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.  கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிக்கின்றனர்" என்று  குற்றம்சாட்டப்பட்டது.

 

அப்போது, ‘செயற்குழுவில் ஏதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக தரப்பில், "கட்சி என்றால் கூட்டங்களை கூட்டுவதும், முடிவுகளை எடுப்பதும் தினந்தோறும் நடப்பதுதான் என்றும், கர்நாடகா தேர்தல் தொடர்பாக செயற்குழுவில் எந்த முடிவும் எடுக்கலாம் அல்லது எடுக்கப்படாமல் இருக்கலாம்" என்றும் விவரித்தனர்.  இதனையடுத்து,  நீதிபதிகள், இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதால், எந்த இடைக்கால கோரிக்கையும் விசாரிக்கப்படாது என்பது நீதிமன்றத்தின் முடிவு என தெரிவித்ததுடன், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் உள்ளிட்ட எதிலும் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று  தெரிவித்தனர். 

 

தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், எந்த உத்தரவும் இந்த வழக்கில் இன்று பிறப்பிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21 ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தேவைப்பட்டால் ஏப்ரல் 24 ஆம் தேதியும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்