Skip to main content

பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
govt bus



பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளின் சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே சட்டவிரோதமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
 

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ முதல் 150 கி.மீ வரை இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 50% பேருந்துகள் விரைவுப் பேருந்துகள் என மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 150 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 20% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
 

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பேருந்துகளில் இதுவரை ரூ.152 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 15%, அதாவது ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.175 வசூலிக்கப் படுகிறது. திருவண்ணாமலை - விழுப்புரம், திருவண்ணாமலை-சேலம், திருப்பதி - திருவண்ணாமலை, காஞ்சிபுரம்- திருவண்ணாமலை மார்க்கங்களிலும் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலான கட்டணம் 20% அதாவது 72 ரூபாயிலிருந்து ரூ.86ஆக உயர்ந்துள்ளது. நகரப் பேருந்துகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் எல்.எஸ்.எஸ் (LSS) வகை பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு, ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் கடந்த  ஜனவரி மாதம் தான் 100% வரை பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், கட்டண உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்து விட்டது. காரணம், உயர்த்தப்பட்டக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்த பலரும் தொடர்வண்டி, தானி, வேன்களுக்கு மாறிவிட்டது தான். இப்போதும் கட்டணம் உயர்த்தப்பட்ட மார்க்கங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் வருவாய் அதிகரிப்பதற்கு பதில்  குறையத் தான் போகிறது. தனியார் பேருந்துகளில் ஏராளமான வசதிகளுடன் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பேருந்துகளை டீலக்ஸ் பேருந்தாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதை நம்பி தங்களின் பணத்தைக் கொட்டி பயணம் செய்து ஏமாறுவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை.   
 

டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்பது உண்மை தான். இந்த நெருக்கடியை சமாளித்து போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்குவதில் தான் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் வெளிப்படும். அதற்கு மாறாக,  டீசல் கட்டணம் உயரும் போதும், போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கும் போதும் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதென்பது நிர்வாகத் திறன் அல்ல. மாறாக எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் செலவுக்கு ஏற்றவாறு வரவை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதென்பது வரவு&செலவு  கணக்கில் மட்டும் கவனம் செலுத்தும் மேஸ்திரியின் செயலுக்கு இணையானதாகும். இது நல்லதல்ல.
 

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தையே தனியார் பேருந்துகள் வசூலிக்கின்றன. இதன் மூலம் அதிக பயணிகளை ஈர்த்து அதிக வருவாயையும், கூடுதல் லாபத்தையும் ஈட்டுகின்றன. அதேநேரத்தில் அரசுப் பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகுபவையாகவும்,  காற்றடித்தால் மேற்கூரை பறந்து செல்லுபவையாகவும் இருப்பதால் அதில் பயணம் செய்யவே மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டவிரோத கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதிலிருந்து விலக்கியே வைக்கும். இது போக்குவரத்துக் கழகங்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும்.
 

கடந்த ஜனவரி மாதத்தில் பேருந்துக் கட்டணங்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களில் 30 விழுக்காட்டினர் வேறு வகையான போக்குவரத்துகளுக்கு மாறினர் என்பது அரசுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும். இதை உணர்ந்து, கடந்த காலங்களில் விலகிச் சென்ற பயணிகளை மீண்டும் அரசுப் பேருந்துகளுக்கு அழைத்து வருவது மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலிமைப்படுத்தும்; மாறாக, சட்டவிரோத கட்டண உயர்வுகள் அவற்றை சிதைத்து விடும்.


எனவே, அரசுப் பேருந்துகளின் வகைப்பாட்டை மாற்றி உயர்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பேருந்துகளில் காணப்படும் குறைகளை களைந்து, மக்கள் ஆதாரவை  மீண்டும் பெற்று போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.