Skip to main content

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என  பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன்.  மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.