Skip to main content

தேநீர் கொடுக்க தாமதம்; மனைவியின் தலையை வெட்டிக் கொன்ற கொடூரக் கணவன்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
A wife lost her lives by her husband at uttar pradesh for Delay in serving tea

உத்தர பிரேதச மாநிலம், காசியாபாத் அருகே உள்ள பசல்வர் பகுதியைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ் (52). இவர் அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுந்தரி (50) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 

இந்த நிலையில், தரம்வீருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தை விட்டுவிட கூறி சுந்தரி தனது கணவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், தரம்வீர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்தும், அவரை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல் காலையில் எழுந்த சுந்தரியிடம் தரம்வீர் தேநீர் போட்டு தருமாறு கேட்டுள்ளார். இதில், சுந்தரி தேநீர் போட சிறிது நேரம் ஆகிவிட்டது போல் தெரிகிறது. 

இதனால், கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த தரம்வீர் வீட்டில் இருந்த வாளை எடுத்து சுந்தரியின் தலையை வெட்டியுள்ளார். அதோடு நின்றுவிடாமல், அவரது உடலிலும் வாளால் சரமாரியாக வெட்டி அங்கியிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில், படுகாயமடைந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தம்பதியின் மூத்த மகன் போஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியிருந்த தரம்வீரை கைது செய்தனர். அதன் பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்