!["Wearing a face mask reduces corona infection by 60 percent" - Narayanasamy interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KoLrTmIG3Z3x2VSvzMRo72AfLwB4PkY_Yhz3Y0T2ddg/1594576946/sites/default/files/inline-images/fh_6.jpg)
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று(12.07.2020) வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,
"கரோனா பரவக்கூடிய இடங்களாகக் கடைகள் உள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபேர் கூடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும் அதிகமாகப் பரவுகிறது. இதனால் நோய்ப் பரவுவதைத் தடுக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருந்தால் 60 சதவீதம் குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்று இருப்பவர்களுடன் பழகுவதால் தற்போது இது பரவுகிறது.
இந்தியாவை பொருத்துவரை 8 லட்சத்திற்கு அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் கரோனா நோய்த் தொற்றுடன் நாம் வாழப் பழகிக்கொள்ளவேண்டும். தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் செலவுகளைச் சமாளிக்க அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கி உதவி வருகின்றன. இது தொடர வேண்டும். கோவிட் நிவாரண நிதியில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
யூ.சி.ஜி உத்தரவின் அடிப்படையில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்த அறிவுறித்தியுள்ளன. அதன்படி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் என்னைச் சந்தித்துத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். கரோனா நோய் அதிகரித்து வருவதால் மாணவர்கள் செமஸ்டரில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்ய மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்'' இவ்வாறு அவர் கூறினார்.