



உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், என்.வி.ரமணாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் 1957ஆம் ஆண்டு பிறந்தார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சட்டப்படிப்பை 1983ஆம் ஆண்டு தொடங்கினார். ஆந்திரா உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட என்.வி.ரமணா, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.
உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே, கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் (23/04/2021) நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.