
“பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நேற்று(6.9.2023) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சி அடைந்து வந்தாலும், நாம் மட்டும் அந்த வீழ்ச்சியில் இருந்து தப்பித்து இருக்கிறோம். நமது பாரதத்தின் அடித்தளம் உண்மை என்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. நமது கலாச்சார வேர்களைப் பிடுங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கலாச்சாரத்தின் வேர்கள் உண்மை என்பதால் பாரதம் பாதுகாக்கப்படுகிறது.
சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சம உரிமையை வழங்கும் வரை இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் கொடுக்க வேண்டும். பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடரவேண்டும். இதற்கு ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவளிக்கும்.” என்றார்.