
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (12/06/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று, பரவலாக அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக கிராமப்புறங்களில் அதிகளவு பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து வருபவர்களால் புதுச்சேரியில் அதிகளவு தொற்று பாதிப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வயோதிகர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களிடமிருந்து விலகி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் சமூகப் பரவல் இல்லை. தொற்றுள்ளவர்களிடமிருந்து தான் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களாலும் தான் அதிகளவு தொற்று பரவுகின்றது. அதற்காகத் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்காமல் அனைத்து விதநோய்களுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
புதுச்சேரி மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலமாக வெளியில் உள்ள ரவுடிகளை தொடர்பு கொண்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதும், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதைக் கண்காணிக்க சிறைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகளை ஒடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடமே மத்திய அரசு முதலமைச்சர் செலவிடும் நிதியை 10 கோடியில் இருந்து 50 கோடி வரை செலவிட அனுமதி அளித்தும் ,துணை நிலை ஆளுநர் அதனை மீண்டும் மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். இது போன்று மத்திய அரசின் உத்தரவை மதிக்கவில்லை. துணை நிலை ஆளுநரின் மக்கள் விரோத போக்கால் மக்களுக்கு அரசால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று குற்றம் சாட்டினார்.