Skip to main content

"நமது கூட்டு நம்பிக்கை வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை" -ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

mk stalin - rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

 

அப்போது ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டை உங்களின் வாழ்நாளில் ஆள முடியாது என பாஜகவை சாடினார். மேலும் தனது உரையின்போது நீட் விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமை பற்றியும் பேசினார். ராகுல் காந்தியின் இந்த உரை, இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்து  எதிர்வினையாற்றி வருகின்றனர்.

 

இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தின் வாதங்களை நாடாளுமன்றத்தில் ஒலித்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய எழுச்சியூட்டும் உரைக்காக அனைத்து தமிழர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதையை மதிக்கும், தனித்துவமான கலாச்சார, அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களை நீங்கள் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறீர்கள்" என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மக்களுடன் சேர்த்து, நாட்டின் அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள். உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு ஸ்டாலின் அவர்களே. பன்மைத்துவ, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு இந்தியா என்ற சிந்தனை மீதான நமது கூட்டு நம்பிக்கை வெற்றிபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்