
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் பானு ரத்தோர். இவருக்கு, ஹிமான்ஸு ரத்தோர் என்ற மகனும், நேகா ரத்தோர் (23) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேகாவும், வேறு சாதியைச் சேர்ந்த சுராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை நேகா காதலிப்பதால், பானுவும் ஹிமான்ஸும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சுராஜை பலமுறை சந்தித்து நேகாவை விட்டு விலகுமாறு மிரட்டியுள்ளனர். ஆனாலும், அந்த இளம்ஜோடி தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி நேகாவும், சுராஜும் காசியாபாத்தில் உள்ள கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த விவகாரத்தை அறிந்த நேகாவின் தந்தையும், சகோதரரும், நேகாவை பிடித்து கொடூரமாக ஆணவக் கொலை செய்தனர். கொலை செய்த ஆதாரத்தை அழிப்பதற்காக, நேகாவின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து அடுத்த நாள் அவருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவலை அறிந்த போலீசார், தந்தை மற்றும் மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.