Skip to main content

டெல்லி கலவரம்; பிரதமர் மோடி வேண்டுகோள்...

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் நிகழ்ந்து வரும் சூழலில், பிரதமர் மோடி டெல்லி மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 

modi request to delhi people

 

 

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த கலவரம் தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது. இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. காவல்துறை மற்றும் பிற ஏஜென்சிகள் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமைதியும் நல்லிணக்கமும் தான் நமது நெறிமுறைகளுக்கு முக்கியமானவை. அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு எனது டெல்லி சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அமைதியாக இருப்பது முக்கியம் மற்றும் இயல்புநிலை விரைவில் மீட்டெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்