![Miss Kerala passed away while trying to avoid accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/sbBlOJVBCU4FWQb7hY4ryeYavVNWKnQPRG6U4wcR1qo/1635832749/sites/default/files/inline-images/miss-kerala.jpg)
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நடந்த கார் விபத்தில் பெண்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். எர்ணாகுளம் பைபாஸ் வைற்றிலா அருகே சாலையில் பைக் மீது கார் மோதாமல் இருப்பதற்காக திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் கார் முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. இதில், 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற ஆன்சி கபீர் (25) மற்றும் இரண்டாவது ரன்னர் அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆன்சி கபீர் திருவனந்தபுரம் மாவட்டம், ஆட்டிங்கள் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அஞ்சனா ஷாஜன், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவராவார். அஞ்சனா ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது. இருவரும் தோழிகள் என்பதால் ஒன்றாக சேர்ந்து பல்வேறு ஃபோட்டோ ஷூட்டுகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களுடன் காரில் பயணம் செய்த அவர்களது நண்பர்களான முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கடுமையான காயம் காரணமாக உயிருக்குப் போராடிவருகிறார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்திவருகின்றனர்.