Skip to main content

மணிப்பூர் கலவரம்; மாநில முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Manipur issue ; Amit Shah consults with the Chief Minister of the state

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான வழக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, மணிப்பூர் உயர் நீதிமன்றம், நான்கு வாரத்துக்குள் மெய்டீஸ் சமூகத்தினரின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

 

இந்நிலையில், மற்ற பழங்குடியின சமூகத்தினர் மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு ஒன்று நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தேறின. மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

கலவரம் பெரிய அளவில் உருவாகி வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேற, அம்மாநில ஆளுநர் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்தார். அதேபோல், வடகிழக்கு இரயில்வே ‘நிலைமை சீராகும் வரை மணிப்பூருக்குள் எந்த ரயில்களும் இயக்கப்படாது. ரயில் இயக்கத்தை நிறுத்த மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றும் நேற்று முன்தினமும் டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் ஆலோசனை நடத்தினார். அதேபோல், மணிப்பூருக்கு அருகில் உள்ள அசாம் உள்ளிட்ட மாநில அதிகாரிகளிடமும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்