அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் உறவு, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தையை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மீண்டும் நிதி உதவி அளிக்க அதிபர் ட்ரம்பிடம், இம்ரான்கான் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேசசுவார்த்தையில் தங்கள் நாட்டில் சுமார் 40 பயங்கரவாதிகள் குழு இருப்பதை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். அத்துடன் தங்களது நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருப்பதாக பகிரங்க தெரிவித்தார். இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
![india external minister secretary raveesh kumar called press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/KoLdbm1Pzwi5F4EDhtWIgo6NaZMlRT72CvcTSAs-Y0Y/1564058107/sites/default/files/inline-images/raveeh%20kumar%201.jpg)
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருவதாகவும், அந்நாட்டு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத குழுக்கள் தங்கள் நாட்டில் இருப்பதை, பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.