
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 48 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஹரியானாவில் பாஜகவினர் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் மேடை, ஹெலி பேட் முதலியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.