
திருமணம் மான இரண்டே வாரத்தில் கணவரை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகதி யாதவ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரகதி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் காதல் விவகாரம் குறித்துத் தெரிந்தவுடன் பிரகதிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்கத் தீவிரமான ஏற்பாடுகள் நடந்துள்ளது.
ஆனால், பிரகதி வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. இருப்பினும் அவரது பெற்றோர், கடந்த மார்ச் 5 ஆம் தேதி திலீப் என்ற இளைஞருக்கு காட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த பிரகதிக்கு திருமணத்திற்கு பிறகு காதலர் அனுராக்கை பார்க்க முடியாமல் போனது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி வயல் வெளியில் திலீப் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரகதியும் அனுராக்கும் சந்தித்து கொள்வதற்கு இடையூறாக இருந்ததால், இருவரும் சேர்ந்து திலீப்பை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ராமாஜி சௌத்ரி என்ற ஒப்பந்த கொலையாளி ஒருவரை நியமித்து கணவர் திலீப்பை கொலை செய்ய ரூ.2 லட்சம் பணம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ராமாஜி சௌத்ரி தனது ஆட்களை வைத்து காரியத்தை முடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிரகதி - அனுராக் இருவரையும் கைது செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்தவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.