Skip to main content

பொது வாழ்க்கையிலிருந்து விலகல்! ஆலோசகர் பதவியை உதறிய பிரசாந்த் கிஷோர்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Deviation from public life! Prasanth Kishore resigns as advisor

 

தேர்தல் வியூக வகுப்பாளராக இந்தியாவில் புகழ்பெற்றவர் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக என பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றியவர். இதில் வெற்றியும், தோல்வியும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. 

 

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் திமுகவுக்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்காகவும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். நடந்த முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது திரிணாமூல் காங்கிரஸ்.

 

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சரான அம்ரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். அதனையேற்று கடந்த சில மாதங்களாக முதல்வருக்கு ஆலோசனைகளை வழங்கிவந்தார் பிரசாந்த். 

 

இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். 2024இல் நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்ற அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ராகுல் காந்தி. அதற்கு பிரசாந்த் கிஷோரும் சம்மதித்ததாக தெரிகிறது. 

 

அதன்படி முதற்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் தொடங்கி, தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புவரை அனைத்து நிலைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அவர் ஆலோசனை வழங்கியதாகவும், அதனை ராகுல் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

 

இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கும், கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் நீண்டகாலமாக பணிப்போர் நடந்துவருகிறது. சித்துவின் நண்பரான பிரசாந்த் கிஷோர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமியுங்கள் என ராகுலுக்கு அழுத்தம் கொடுத்தார். அது ராகுலுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், பிரசாந்தின் யோசனையை ஏற்று காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். 

 

அவரது நியமனத்திலிருந்து முதலமைச்சர் அமரீந்திர் சிங்குக்கும் பிரசாந்துக்கும் ஏழாம் பொருத்தமாக மாறியது. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இதனையடுத்து, முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தற்போது அறிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

 

இதுகுறித்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், ’’பொதுவாழ்விலிருந்து விலகியிருக்கும் என்னுடைய தற்காலிக முடிவால், முதன்மை ஆலோசகர் பதவியைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்னும் நான் முடிவு எடுக்காததால் எனது ராஜினாமாவை ஏற்று பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.