Skip to main content

நேரு குறித்த விமர்சனம்; அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Criticism of Nehru; Amit Shah is strongly criticized by the opposition parties

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, கடந்த 5ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது. 2 நாட்களாக நடந்த இந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன் தினம் (06-12-23) பதில் அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “1947ஆம் ஆண்டு நம் நாட்டு ராணுவம், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பை அடைந்த போதும், நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறு தான்’ என்று பின்னாளில் நேருவே தெரிவித்தார். அது நேருவின் தவறு அல்ல பிழை.

மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எனவே, அந்த பிரிவு போய்தான் பிரச்சனையை தீர்க்க முடியும். அதை நீக்குவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்ததால் அந்த பிரிவை நீக்கினார்” என்று பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “1947 மற்றும் 1948ஆம் ஆண்டில் காஷ்மீரில் நேருவின் பங்கு குறித்து வேண்டுமென்றே அப்பட்டமான பொய் செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் கருத்துகளை சிதைப்பதற்கான தந்திரங்கள் தான் இவை. இந்த வலையில் நாங்கள் விழமாட்டோம். சந்திரசேகர் தாஸ்குப்தானின் தலைசிறந்த புத்தகமான ‘காஷ்மீரில் போர் மற்றும் ராஜதந்திரங்கள்’ போன்ற புத்தகங்களை அமித்ஷாவை படிக்க வைக்க வேண்டும். பல கட்டுக்கதைகள் அதில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், “நேருவுடன் அவர்களுக்கு எப்போதும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் புதிதாக எதுவும் இல்லை. நேருவின் பணியை அவர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள். அது தொடர்ந்து நடக்கிறது. இது தான் அரசியல்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்