Skip to main content

“கட்சியின் அணுகுமுறை சரியில்லை” - காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Congress MP resigns in assam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதனிடையே, நாளை (16-03-24) மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 14 மக்களவைத் தொகுதி கொண்ட அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் ஏற்கனவே உள்ளனர். இதில், 2 எம்.பிக்களுக்கு வரவிருக்கும் 2024 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் கட்சி வாய்ப்பு அளித்திருக்கிறது. 3வது எம்.பியாக உள்ள அப்துல் காலிக்கிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அசாம் மாநிலத்தில், இதுவரை 2 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்.பியாக பதவி வகித்து வந்த அப்துல் காலிக், தற்போது தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று (15-03-24) அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து, தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பியுள்ளார். 

அவர் அளித்திருந்த அந்த கடிதத்தில், ‘எனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினேன். எனக்கு ஆதரவாக நின்ற எனது தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அளவற்ற நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்கள் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் தீவிர உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு காலக்கட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரின் அணுகுமுறையும், அசாமில் கட்சியின் வாய்ப்பை அழித்துவிட்டதாக நான் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்