Skip to main content

 கிராம சேவை கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி! முட்புதர்கள் மறைவில்  மாணவர்கள் ஒதுங்கும் அவலம்! 

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
s

  
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்வேறு இயற்கை சீற்றங்களால் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியை தற்காலிகமாக  கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்கிரமத்தில் உள்ள கிராம சபை கட்டிடத்திற்கு மாற்றினர். மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத கிராம சபை கட்டிடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆபத்துகளுடன் குழந்தைகள் படித்து வருகின்றனர். 

 

s


 6 வயது முதல் 12 வயது உடைய குழந்தைகள் படிக்கும் இந்த கிராம சேவை மையத்தில் உள்ள பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால், விஷத்தன்மை கொண்ட பாம்பு, தேள் வசிக்கும் , முட்புதர்களின் மறைவில்  ஆபத்தை உணராமல், இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 


மேலும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு, எவ்வித வழிவகை செய்யாமல் இருப்பதால், வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துவரும் கட்டாயத்திற்கும்  தள்ளப்பட்டுள்ளனர்.  
கழிவறை வசதி, குடிநீர் வசதி, போன்ற எவ்வித அடிப்படை வசதிகளே இல்லாத இந்த கிராம சபை கட்டிடத்தையே  பள்ளிக்கூடமாக மாற்றியும், எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சத்துணவு பொருட்கள் பாதுகாக்கும் அறையாகவும், கிராம நிர்வாக அலுவலகத்தை சமைக்கும் அறையாகவும்  பயன்படுத்துகின்ற மோசமான நிலைமைதான் நிலவுகிறது.

 

h


இதுதான் தமிழக அரசின் வளர்ச்சி, முன்னேற்றமோ என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். 


புதிய பள்ளி கட்டடிடம் கட்டுவதற்கு இடம் கொடுத்தும்,  தமிழக அரசு காலம் தாழ்த்துவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிரந்தரம் இல்லாத இடத்தில் பள்ளிக்கூடம் மற்றும் சமையலறை இருந்து வருவதாலும், அடிப்படை வசதி இல்லாமல் , கல்வி பயலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கருதியும், தமிழக அரசு விரைந்து, காலந்தாழ்த்தாமல் தங்களது கிராமத்திற்கு பள்ளிக்கூடம் கட்டி தர  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.