Skip to main content

தலித் பக்தரை தோளில் சுமந்து வலம்வந்த அர்ச்சகர்! - (வீடியோ)

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். சாதிரீதியிலான படிநிலைகள் பல்வேறு துறைகளில் இன்னமும் பின்பற்றப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் கோவில் விழா நிகழ்ச்சியைப் பார்த்த தலித் இளைஞர் உயர்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார்.

 

இதுமாதிரியான தொடர் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், தெலுங்கானா மாநிலத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்தை விளக்கும் வகையில், தலித் பக்தரை அர்ச்சகர் ஒருவர் தனது தோளில் சுமந்து வலம்வந்த நிகழ்வு பலதரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

 

Dalit

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சில்கூர். இங்குள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் 3ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முனிவாகன சேவா நிகழ்வு நடைபெற்றது. இதில், தலித் பக்தர் ஆதித்யா பரஸ்ரீ என்பவர் கழுத்தில் மாலை, தலைப்பாகையுடன் அலங்கரிக்கப்பட்டு வர, அவரை அந்தக் கோவிலின் அர்ச்சகர் சி.சி.ரங்கராஜன் தனது தோளில் தூக்கிக்கொண்டு வலம்வந்தும், கட்டியணைத்துக் கொண்டும், பூஜை நடத்தியும் கோவிலை வலம்வந்தார். இந்த நிகழ்வினை பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். 

 

Dalit

 

இதுகுறித்து அர்ச்சகர் ரங்கராஜன், ‘இது 2,700 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மிகப் பழைமையான நிகழ்வாகும். இது சனாதன தர்மம் (இந்துமதம்) சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்கிறது. மனிதர்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்ட போதனைகளைச் செய்த வைஷ்ணவ மதபோதகர் ராமானுஜரின் ஆயிராமவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் தருணத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்த நிகழ்வு பொதுசமூகத்தின் சகோதரத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வைஷ்ணவ கோவில்களிலும் இது கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Dalit

 

மேலும், இந்த உற்சவத்தின் நாயகனான ஆதித்யா பரஸ்ரீ, ‘ஒரு தலித்தாக நானும், என் குடும்பத்தினரும் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறோம். மகபூப்நகரில் உள்ள அனுமான் கோவிலில் நுழையக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது இன்னமும் பல கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய நிகழ்வு மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என நான் நம்புகிறேன்’ என உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.

 

 

தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத சூழல் பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. பெரியார் போன்ற தலைவர்களால் கோவில் நுழைவுப்போராட்டங்கள் நடத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் காக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தலித்துகளையும் கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. ஆனால், அது இன்றளவிலும் மிகப்பெரிய சவாலாகவே இருந்துவருகிறது. எஸ்.இ/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்திடும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார்.