Skip to main content

சென்னை பெண்ணுக்கும் HIV ரத்தம் - தொடரும் அரசு மருத்துவமனைகளின் அவலம்

Published on 28/12/2018 | Edited on 29/12/2018
h

 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை பெண்ணுக்கும் HIV ரத்தம் செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது.   சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாங்காடு பகுதியை சேர்ந்த  கர்ப்பிணி லதாவிற்கு HIV ரத்தம் ஏற்றப்பட்டு, அந்த பெண்ணுக்கு செப்டம்பர் 15ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.

 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது),  ‘’நான் எந்த தவறும் செய்யாதவள்.  எந்த தவறும் செய்யாமல் தண்டனையை அனுபவித்து வருகிறேன்.  எனக்கு ரத்தம் செலுத்தியதற்கான ஆதாரங்களை வைத்துள்ளேன்.  நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது ரத்த சோகையினால் ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.  அதன்படி,  கடந்த ஏப்ரல் மாதம்  5ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனக்கு 2 யூனிட் ரத்தம் செலுத்தினார்கள்.  இதையடுத்து,  ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது நடந்த பரிசோதனையில் எனக்கு எச்.ஐ.,வி இருப்பதாக கூறினார்கள்.  எச்.ஐ.வி.  ரத்தம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.  

 

குடும்பத்தோடு சென்று முறையிட்டும் மருத்துவர்கள் தாங்கள் இதற்கு பொறுப்பாக முடியாது என்று தட்டிக்கழித்தனர்.  மருத்துவர்கள் மீது வழக்கு தொடர எங்களிடம் வசதி இல்லை.  எனக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.  

 

ஊராருக்கு தெரியக்கூடாது. அதனால் இந்த சம்பவத்தை பற்றி வெளியே பேச வேண்டாம் என்று உறவினர்கள் கூறியிருந்தனர்.  அதனால் வெளியே யாருக்கும் சொல்லாமல் இருந்தேன்.  இப்போது உறவினர்களே என்னை  நெருங்க விடாமல் அடித்து துரத்துகின்றனர்.   சிவகாசி சம்பவம் இப்போது வெளியே வந்துள்ளதால் நானும் தைரியமாக எனக்கு நேர்ந்த அவலத்தை வெளியே சொல்கிறேன்.

 

அக்கா, அண்ணன் என்று நெருங்கிய உறவுகளே என்னை கைவிட்டு விட்டனர்.  நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை.  எந்த பாதிப்பும் இல்லாத என் மூத்த குழந்தையையும் கூட தொட உறவினர்கள் யோசிக்கிறார்கள்.  அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எனக்கு கருணை தொகை தராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்’’என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரோ, இந்த விவகாரம் குறித்து இப்போதுதான் என் கவனத்திற்கு வருகிறது. ஏற்கனவே என் கவனத்திற்கு வந்து நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மறுக்கிறேன்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் குறித்து விசாரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகிலேயே ஹெச்.ஐ.வி வைரஸ் குணமான 2வது நபர்... 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
the london


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது உடலிலிருந்து முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும்.
 

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த இந்நபரை ‘தி லண்டன் பேசண்ட்’ என அழக்கின்றனர். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்தவருக்கு 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் நோய் அறிகுறி இல்லையென்றாலும் எய்ட்ஸ் முற்றிலுமாக இந்த நபரைவிட்டு நீங்கியதா என்பதை சில காலம் கழித்துத் தான் அறிய முடியும் என்கிறார் பேராசிரியரும் ஆய்வாளருமான ரவீந்திர குப்தா.
 

தற்போதைய மருத்துவ அறிவியல் சூழலில் இவர் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

14 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி ரத்தம் - நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பம்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு  எச்.ஐ.வி   ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை மாங்காட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும்  எச்.ஐ.வி   ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர வைத்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்த சிறுமிக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

 

si

 

கடந்த 2009ம் ஆண்டில்  செப்டம்பர் மாதம் மானாமதுரையைச்சேர்ந்த  14வயது சிறுமிக்கு அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதால் ரத்தம் வருவதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என்று தனியார் கிளினிக்கில் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  அதன் பின்னர் செப்டம்பர் 25, 26 தேதிகளில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமிக்கு இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.  சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் ரத்தம் வருவது நிற்காததுடன்,  உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளன.  இதையடுத்து 2010ம் ஆண்டில் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமிக்கு எச்.ஐ.வி.  தொற்று இருப்பது தெரியவந்து குடும்பத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.  

 

எச்.ஐ.வி பாதிப்பின் வலியுடன் கடந்த  8 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அந்த இளம்பெண். சாத்தூர், மாங்காடு பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளியே வந்ததும் மானாமதுரை இளம்பெண்ணும் இந்த பிரச்சனையை வெளியே சொல்ல முன்வந்துள்ளார்.

 


 எந்த வித தவறும் செய்யாமல் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி, பலரின் கேலி, கிண்டல்களால் மனம் நொந்து போய் பல சமயங்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கதவை உடைத்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றியிருக்கின்றனர்.  என் மகளை காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று  அந்த இளம்பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.

 


இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.   வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வாதாடிவருகிறார்.   பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.