Skip to main content

சசிகலாவை வரவேற்று அதிமுக மாவட்ட பிரதிநிதி போஸ்டர்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

ddd

 

சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக இருந்த சுப்பிரமணிய ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் திருச்சியில் அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை. சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனதையொட்டி அவர் வருகின்ற பிப்ரவரி மாதம் சென்னைக்குத் திரும்ப உள்ள நிலையில், அவரை வரவேற்று அந்தநல்லூர் ஒன்றியம் பகுதியில் பெரிய அளவிலான பேனர் வைத்து வரவேற்பு கொடுத்திருக்கிறார். 

 

இவர் தற்போது அதிமுகவில் மாவட்டப் பிரதிநிதியாகவும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் பதவி வகித்தவர். தற்போது அவர் ''தியாகத் தலைவி சின்னம்மா வருக வருக'' என்று வரவேற்று அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி சார்பிலும் வடக்கு மாவட்டம் சார்பிலும் போஸ்டர் அடித்துள்ளார். இது தற்போது திருச்சி அதிமுகவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை கட்சித் தாவலுக்கு தயாராகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

நேற்று (28.01.2021) கரூர் மாவட்டத்தில் செந்தில்நாதன் கட்சித் தாவியிருக்கும் நிலையில், இன்று திருச்சி மாவட்ட அதிமுக பிரதிநிதி இப்படிப்பட்ட ஒரு போஸ்டர் அடித்திருப்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்