Skip to main content

எப்போது இறந்தார்? வாஜ்பாய் மரண மர்மம்! -டெல்லி டென்ஷன்!

Published on 22/08/2018 | Edited on 23/08/2018
vajpayee death

 

"உங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே இங்கே மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மரணத்திலும் மர்மம் இருக்கிறது'' என்கிற குரல்கள் டெல்லியில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

ஜெ.வைப் போலவே வாஜ்பாயும் சர்க்கரை நோயாளி. அவருக்கும் ஜெ.வைப் போலவே மூட்டுவலி தொந்தரவும் இருந்தது. 2001-ஆம் ஆண்டிலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் வாஜ்பாய். நீண்டநாள் சர்க்கரை வியாதி அவரது சிறுநீரகத்தின் செயலாக்கத்தை மிகக் கடுமையாக பாதித்தது. இரண்டில் ஒரு சிறுநீரகத்தை அவர் இழந்தார். செயல்படும் ஒற்றை சிறுநீரகத்தோடு வாழ்ந்துவந்த அவர் மிகவும் சிரமப்பட்டார். அதனால் பொது வாழ்விலிருந்து ஒதுங்கிய வாஜ்பாயை 2009-ஆம் ஆண்டு பக்கவாத நோய் தாக்கியது. அவரது பேச்சும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் நினைவும் தப்பிப் போனது. வீல்சேரில் கூட நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.

அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை மட்டும் செய்து கொள்வார். அப்படி கடந்த ஜூன் 11-ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு சிறுநீர் செல்லும் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தது. அது சிறுநீரகம் மற்றும் இதயம், நுரையீரல் அடங்கிய நெஞ்சுப் பகுதியை பாதித்திருந்தது என அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா கண்டுபிடித்தார்.

 

 


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாடிப்பகுதி முழுவதும் வாஜ்பாயிக்காக ஒதுக்கப்பட்டது. ஜெ.வைப் போலவே நோய்த்தொற்றிலிருந்து அவர் விடுபட அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. நரேந்திர மோடி பிரதமராகி, செங்கோட்டையில் இந்த ஆட்சிக்காலத்தில் கடைசி கொடியேற்றத்தை நிகழ்த்தப் போகிறார் என்ற நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மிக மிக மோசமானது.

 

vajpayee



சுதந்திர தினத்தன்று வாஜ்பாய் இறந்துவிட்டால், அது துக்க தினமாகிவிடும் என்று டெல்லி கவலைப்பட்டது. அதனால் 14-ஆம் தேதி முதல் உடல்நிலை மிகமிக மோசமாக, வாஜ்பாயின் உடலில் செலுத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி வாஜ்பாயின் இதயத்தையும், நுரையீரலையும் எக்மோ (ECMO) எனப்படும் கருவியில் இணைத்தனர். அந்தக் கருவியும் மிகச்சரியாக ஆகஸ்ட் 15-ம் தேதி காலை வாஜ்பாய் இறந்துவிட்டார் என்று அறிவித்தது. எனினும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட உயர்அமைப்புகளோ, வாஜ்பாயின் மரணத்தை ஆகஸ்ட் 16-ம் தேதி 5 மணி 5 நிமிடத்திற்கு அறிவிக்க உத்தரவிட்டன என்கின்றன வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
 

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

டிச. 24 நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பா.ஜ.க. ஏற்பாடு

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
former PM Atal Bihari Vajpayee, on 25th December - celebrated as Good Governance Day

பா.ஜ.க. சார்பில் இந்தியாவில் முதன்முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் பகுதியில் பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி வாஜ்பாயின் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அவருக்கு அமைக்கப்பட்ட 25 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளான டிச. 24ம் தேதி பா.ஜ.க.வினர் சிறப்பாகக் கொண்டாடுவர். பா.ஜ.க.வை தாண்டி மாற்றுக் கட்சியினருடனும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நல்ல நட்புறவை மேற்கொண்டார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியினரும் அவருக்கு மரியாதை செய்வர். 

former PM Atal Bihari Vajpayee, on 25th December - celebrated as Good Governance Day

இந்த வருடம் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த தினமான டிச. 24ம் தேதி நல்லாட்சி தினமாக இந்தியா முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய்யின் வாழ்க்கை வரலாறு படமாகவும் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ‘மெயின் அடல் ஹூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.