Skip to main content

ஆந்திரா கேட்ட சிறப்பு மாநில அந்தஸ்து இதுதான்...  

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

இந்தியாவில் 'சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள்' என்ற ஒரு வரலாற்று வார்த்தை முதன் முதலாக பேசப்பட்டதே 1969-ஆம் ஆண்டுதான். அன்று ஆட்சிபொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு பொருளாதாரத்தில்  பின்தங்கியுள்ள மாநிலங்களை தேர்வுசெய்து அதன் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியுதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் 5வது நிதிக்குழுவின் பரிந்துரையின் கீழ் சிறப்பு மாநில அந்தஸ்துக்கான தகுதி வரைமுறைகளை வகுத்தது. அந்த வரையறைகள் சிறப்பு மாநிலமானது பின்வரும் நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. 
 

chandra babu naidu


மலைப்பாங்கான மக்கள் வாழ்விடம், பக்கத்து நாட்டு எல்லைகளுக்கு இடையில் அல்லது ராணுவ தளம் சார்ந்த மாநிலங்கள்,மிகவும் குறைந்த மக்கள் அடர்த்தி மற்றும் கணிசமான பழங்குடியின மக்கள், மக்கள் வாழத்தக்க அடிப்படை பொருளாதாரமின்றியிருத்தல், பொருளாதார கட்டமைப்பிற்கான வாழ்விடம் சார்ந்த வசதிகள் குறைவு என ஐந்து காரணிகளுக்கு உட்பட்ட மாநிலங்கள்தான் சிறப்பு மாநில அந்தஸ்துக்கு தகுதி பெற்ற தகுந்தவை என வரையறுக்கப்பட்டது.

அப்படி இருக்கும் ஒரு சிறப்பு மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு நிதி உதவி போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் மத்திய அரசின் பட்ஜட்டில் 30% சிறப்பு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். மத்திய அரசின் மானியங்கள் அதிகம் கிடைக்கும், உற்பத்தி வரியில் சலுகை கிடைக்கும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலங்களுக்கு 90 சதவிகித நிதி மானியமாகவும் 10 சதவிகிதம் கடனாகவும் வழங்கப்படும். மற்ற மாநிலங்களுக்கு மானியம் குறைவாக இருக்கும்.

 

border states



முதலில் மூன்று மாநிலங்கள்தான் சிறப்பு மாநிலங்களாக தேர்ந்தெடுக்கபட்டன. ஜம்மு காஷ்மீரும் பின்னர் அசாம், நாகலாந்தும் சிறப்பு மாநிலங்களாக அந்தஸ்து பெற்றன. பிறகு இந்த வரிசையில்  மேலும் பல மாநிலங்கள் இடம்பெற்றன. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று மொத்தம் 11 மாநிலங்கள் சிறப்பு மாநிலங்களாக உள்ளன. கடைசியாக 2010-ல் உத்தரகாண்ட் தான் சிறப்பு மாநில அந்தஸ்த்தை பெற்றது.

இதன் பின் 2014-ல்  ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஹைதராபாத் தெலுங்கானாவின் வசம் சென்றதால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்த இழப்பை சரி செய்ய அடுத்த ஐந்து வருடத்திற்கு ஆந்திராவை சிறப்பு மாநிலமாக அறிவிக்கப்படும் என 20.02.2014 அன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். இதே உறுதிமொழியை பாஜக தங்களுக்கு அளித்ததாலேயே கூட்டணி வைத்தோம் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆனால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாததால் ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசமும், எதிர் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் ஆந்திராவை சிறப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டுமென கோரிவருகின்றன. 

 

babu - modi



இந்நிலையில், 14-ஆம் நிதிக்குழு இனி எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது என கூறியதை அரசு ஏற்றுக்கொண்டதால் இனி அப்படி செய்ய முடியாது எனவே ஆந்திராவின் தேவைகளை கருத்தில் கொண்டு   சிறப்பு மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கிடைக்கும் நிதியை  வேறு வழிகளில் கொடுக்கிறோம்  என நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துவிட்டார். இப்படி சிறப்பு அந்தஸ்து வழங்க 14-வது நிதிக்குழுவை சாக்காக வைத்து மறுப்பது இது முதல்முறை அல்ல ஏற்கனவே வெங்கைய நாயுடு அவர்கள் நகர்ப்புற வளர்ச்சிதுறை  அமைச்சராக இருந்த போதே இதே காரணத்தைக்கூறி மறுத்துள்ளார். மேலும் 2016-லேயே 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவு நீங்குகிறது என்று சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.

நிதிக்குழுவானது கூறுகையில், 'நிதிக்குழுவின் முக்கியவேலையானது ஒரு மாநிலத்தின் வருவாய் ஈட்டும் திறன் மற்றும் செலவு செய்யும் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும் சமமான வரி மற்றும் வருவாயை பிரித்து தருவதே ஆகும்.  மேலும் அதன் தீர்மானத்தின் அறிக்கையில் இனி  சிறப்பு மாநிலங்கள் என்ற பிரிவு இல்லை என பரிந்துரைக்கும் எந்த ஒரு  அங்கமும் இல்லை. சிறப்பு அந்தஸ்துள்ள  மாநிலம் மற்றும் பொதுபிரிவில் உள்ள  மாநிலம் என்று நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தின் பொருளாதார மற்றும் நிதிநிலைமையின் மீது ஆதிக்கம்  செலுத்தும் காரணிகளையும், ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டே நிதி பகிர்வை பரிந்துரைக்கிறோம்' எனவும் கூறியுள்ளது.  ஜம்மு -காஷ்மீர்க்கு இந்திய அரசியலமைப்பு 370 பிரிவின் படிதான்  சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் 371 A  முதல் H வரை உள்ள பிரிவுகளின் படி சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அந்தஸ்துக்கான தகுதி வரையறைகளில் பெரும்பாலானவற்றில்  ஆந்திரா தகுதி பெறவில்லை என்று பாஜக கூறியுள்ளது. கொடுத்த உறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் விலகுகிறோம் என்று தெலுங்கு தேசம் கூறி, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இந்த முடிவால் அரசுக்கு ஆபத்து வருமா? பார்ப்போம்... 

                    

   

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.