ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
நிலையற்ற பேச்சால் இழந்தவை
இன்று, ரஜினியின் அரசியல் பேச்சுகளின் நிலையற்ற தன்மையினால், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் ரஜினி. ஆனாலும் சினிமாவில் அவரது நடிப்பைப் பார்த்து மட்டுமே யாரும் மறுக்க முடியாத அன்பை ரசிகர்கள் செலுத்தியுள்ளனர். ரஜினி என்ற சொல் உலகளாவிய ரசிகர்களை அடிமையாக்கிய சொல். தனது கம்பீர நடை, ஸ்டைல், வசனம் ஆகியவற்றால் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் புல்லரிக்க வைத்தவர். ரஜினி திரைப்படங்களில் தனக்கென ஒரு வழியை வகுத்துக்கொண்டவர். அவரது ரசிகர்களும் சளைத்தவர்கள் அல்ல. இதுவரை எந்த நடிகருக்கும் நடக்காத, அப்படி நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு நிகழ்ந்திடாத பல நிகழ்வுகளை அவருக்காக நடத்தியிருக்கிறார்கள்.
உலகளாவிய ரசிகர்கள்

தன் மொழி, நாடு என எதற்கும் சம்மந்தமில்லாத ரஜினியின் மீதும் பல வெளிநாட்டு மக்கள் அன்பு கொண்டுள்ளனர். கலைஞனுக்கு எல்லைகள் இல்லை என்பதை நிரூபித்தவர் இவர்.
கபாலிக்கு தயாரிப்பாளரின் விளம்பரமும், ரசிகர்களின் விளம்பரமும்

ஒரு பக்கம் கபாலி தயாரிப்பாளர் தாணு விமானத்தை விளம்பரமாக மாற்றினால், ரசிகர்கள் தங்களின் கார்களை நடமாடும் விளம்பரமாக மாற்றினார்கள். பேருந்தும் இதில் அடங்கும். இப்படியான விளம்பரங்கள் வேறு யாருக்கும் நிகழ்ந்ததில்லை. இதற்கு தயாரிப்பாளர்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையும், மக்களின் அன்புமே காரணம். தற்போது எந்திரன் படத்தின் இசைவெளியீட்டு விழா அன்று காலையில் படத்தின் போஸ்டர் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது. இதுமட்டுமல்ல பல நிறுவனங்கள் கபாலி வெளியான முதல்நாள் அன்று விடுமுறை அளித்து டிக்கெட்டுகளையும் தனது பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.
வழிபாடுகள்

ரஜினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரசிகர்கள் கோவில் வழிபாடு, அர்ச்சனை, நேத்திக்கடன் என பல வழிகளில் அவர் நலன் பெற்று வரவேண்டும் என வழிபட்டனர். இது வேறெந்த கட்சி சாராத நடிக்கருக்கும் நிகழ்ந்ததில்லை.
ஆட்சிக்கு உதவிய தலைவன்
அவர் கொடுத்த ஒரு குரல், அந்த ஒரு ஆதரவு அன்றைய நிலையை அப்படியே தலைகீழாக மாற்றியது. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி வெல்ல ஒரு முக்கிய காரணமாக ரஜினி விளங்கினார்.
அவரை பற்றி கூற இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. தனது அரசியல் முடிவை மட்டும் உறுதியாக எடுத்திருந்தால் (அரசியலுக்கு வரவில்லை அல்லது வருகிறேன்) அவரை பற்றிய விமர்சனங்கள் அவரின் காலுக்கு கீழே சென்றிருக்கும் என்பது மிக உண்மை. ஆனால், அவரும் அப்படி நடந்துகொள்ளவில்லை என்பது நிதர்சனம்.
கமல்குமார்