
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துரை வைகோ ஒருவர்என குறிப்பிட்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக என்று கூறப்பட்டது. இதற்கிடையில், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளமாக எப்போது இருப்பேன் என கட்சித் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை என்றும், கட்சிக்குள் வீணாக குழப்பம் ஏற்படுத்தியது மல்லை சத்யா தான் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
இப்படியான பல்வேறு சலசலப்புகளுக்கு இடையே ம.தி.மு.க சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. மதிமுகவின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ என்றே பெயரிட்டே வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய கட்சி துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, “துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். கடைசிவரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்” எனப் பேசினார்.

இந்நிலையில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். நடந்தவற்றை மறந்து ஒன்றாக இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என வைகோவும் வேண்டுதல் வைத்த நிலையில் இருவரும் சமாதானம் அடைந்துள்ளனர். இதனால் தன்னுடைய ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்ப பெற்றுள்ளார். கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும், மல்லை சத்யாவும் அறிவித்துள்ளனர். இதன் மூலம் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தான் எடுத்த முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்திருந்த வைகோ 'சுமூகமான முறையில் தீர்வு எட்ட முயற்சி எடுக்கப்படும்' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.