வன்னியர் குரு' என்று அச்சமூகத்தினரால் அழைக்கப்பட்டவர் ஏ.கே.நடராஜன். வன்னியர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டவர். வன்னியர்கள் மத்தியில் ராமதாசின் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர். தமிழக அரசியல்கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும் ஏ.கே.நடராஜன் மீது மரியாதையும் மதிப்பும் உண்டு. சென்னை தி.நகரில் வசித்துவந்த அவர் கடந்த 10-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவர் காலமானதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைக்கு உடனடியாக தகவல் தந்தார் ஏ.கே.நடராஜனின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கண்ணன் சத்ரியர். தி.மு.க. பொதுக்குழுவில் பிஸியாக இருந்தபோதும் தகவல் அறிந்து உடனடியாக இரங்கல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொதுக்குழு முடிந்ததும் ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் சகிதம் சென்று ஏ.கே.நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், இரங்கல் அறிக்கை தரக்கூட யோசித்தார் எடப்பாடி.
ஸ்டாலின் அறிக்கை தந்திருப்பதுடன் நேரிலும் செல்கிறார் என அறிந்ததும், வன்னியர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என சொல்லப்பட்டதன் பேரிலும் கடைசியில் இரங்கல் அறிக்கை தந்த எடப்பாடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்த மறுத்துவிட்டார். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி. மு.க.வினர், தன்னை வளர்த்த ஏ.கே. நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்லவில்லை ராமதாஸ். அதனையறிந்தே எடப்பாடியும் செல்லவில்லை. ராமதாசுக்காக வன்னியர் தலைவரை எடப்பாடி புறக்கணித்துள்ளதன் பலன் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும்'' என்கிறார்கள்.
