Skip to main content

நல்லகண்ணு அய்யாவுடன் நாங்கள் எடுத்த குரூப் ஃபோட்டோ... - நக்கீரன் ஆசிரியர் பகிரும் நெகிழ்ச்சித் தருணம் 

Published on 30/12/2018 | Edited on 31/12/2018
nakkheeran gopal nallakannu ayya family



நல்லகண்ணு அய்யா... பொதுவாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என யாரும் அவரைக் குறிப்பிடும்போது அய்யா என்ற மரியாதையுடன்தான் குறிப்பிடுவார்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட அவரை விமர்சிப்பதில்லை, காரணம் விமர்சிக்கத்தக்க வகையில், இடத்தில் அவர் என்றுமே இருந்ததில்லை. தன் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு யாருடன் இருந்தாலும், இவரது நிலைப்பாடு எப்பொழுதுமே மக்களுடன்தான். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் 94ஆவது பிறந்தநாள் கடந்த வாரம் (26 டிசம்பர் 2018) வந்தது. உறவினர், நண்பர்கள், கட்சித் தோழர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை வாழ்த்தினர். அன்று வெளிவந்த புகைப்படங்களில், நக்கீரன் ஆசிரியர் குடும்பத்துடன் சென்று நல்லகண்ணு அய்யாவை சந்தித்து வாழ்த்திய படங்கள் இருந்தன. அதிலும் இரண்டு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்றில் மகிழ்வும், நெகிழ்வும் நிறைந்திருந்தது. ஒரு அரசியல்வாதி - பத்திரிகையாளர் உறவு போல இல்லை அவர்கள் உறவு. ஆசிரியரிடமே கேட்டோம்... இந்தப் புகைப்படத்தில் உறைந்திருக்கும் அந்தத் தருணம் நிகழ்ந்தது எப்படி, உங்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவு எப்படி என்று. சிரித்துக்கொண்டே, மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்...

"2010இல் தமிழக அரசு எனக்கு 'பெரியார் விருது' வழங்கியது. கலைஞர் கையால் அந்த விருதைப் பெற்ற போது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. அதன் பிறகு இப்போது 2018ஆம் ஆண்டு 'பிஹைண்ட் உட்ஸ்' எனக்கு அளித்த விருதை நல்லகண்ணு அய்யா கையால் பெற்றபோது வாழும் பெரியார் கையால் இந்த விருதைப் பெறுகிறோம் என்ற பெருமை எனக்கு ஏற்பட்டது. அதை நான் அந்த மேடையில் சொன்னேன். வாழும் பெரியார் என்றால் வெறும் புகழ்ச்சிக்காக சொல்வது இல்லை. உண்மையாக நான் உணர்வது. 94 வயதிலும் நல்லகண்ணு அய்யா, நடந்தே கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார், மீட்புப் பணியில் பங்களித்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் கொஞ்சமேனும் தண்ணி ஓடுதுன்னா அதுக்குக் காரணம் நல்லகண்ணு அய்யா வழக்கு நடத்தி குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க வாங்கிய தடைதான். இன்றும் சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் என்றால் அவர்தான் முன்னின்று போராடுகிறார். இப்படி, இத்தனை வயதில், வைரம் பாய்ஞ்சு தன் உடலுடன் மக்களுக்காக சுற்றி சுற்றி செயல்படும் ஒரு தலைவருடன் நமக்கு அறிமுகம் இருக்கிறது என்பதே பெரிய விஷயம். அவர் நம் மீது, நம் குடும்பத்தின் மீது பாசம் வைக்கிறார் என்பதெல்லாம் எனக்குக் கிடைச்ச பேறுதான்.

 

nakkheeran gopal meets nallakannu cpi

 

 

நல்லகண்ணு அய்யாவுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரிய வரலாறு இருக்கு, பெரிய தலைவர்களின் பழக்கம் இருக்கு. எத்தனையோ தருணங்களில் பெரிய பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கு. இந்தியா முழுவதும் அவர் மேல் அன்புள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள். இது எதையுமே அவருக்காகவோ, அவரது குடும்பத்தினரின் யாருக்காகவுமோ பயன்படுத்தியவர் இல்லை. பல அரசியல் தலைவர்கள் எளிமையானவர்கள்தான். ஆனால், அவர்களது குடும்பத்தில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பயனடைந்திருப்பார். இப்படிப்பட்ட அரசியல் உலகில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தின் எந்த உறுப்பினரும் எந்த வகையிலும் அரசியலால் பலனடையாமல் தூய வாழ்க்கையை வாழ்பவர் நல்லகண்ணு அய்யா. பொதுவாகவே கம்யூனிஸ்டுகளின் கொள்கை இதுதான் என்றாலும், நல்லகண்ணு அய்யா என் கண் முன்னே இப்படி வாழ்பவர்.

ஒவ்வொரு வருடமும் அய்யாவின் பிறந்தநாள் எப்பொழுது வரும் என்று காத்திருந்து அவரைப் போய் பார்ப்பேன். மற்ற நாட்களிலும் அவரை சந்திப்பது நடக்கும் என்றாலும், அந்த நாளில் அவரது குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை யார் யார் வர்றாங்கன்னு முன்னாடியே கேட்டுக்கிட்டேன். அவுங்களும் "மாமா எப்போ அப்பாவைப் பார்க்க வர்றீங்க?"ன்னு கேட்டாங்க. என் இளைய மகள், வழக்கறிஞரா உருவாகிக்கிட்டு இருக்காங்க. அவுங்க, "அப்பா, தாத்தாவுக்கு குளோப் ஜாமூன் ரொம்பப் பிடிக்கும்"னு சொல்லி முந்துன நாளே அவுங்க கையாலேயே செஞ்சு கொண்டு போய் கொடுத்தாங்க. அதை விரும்பி  சாப்பிட்டவர், காலையில் என்னிடம் சொன்னார், "பேத்தி குளோப் ஜாமூன் கொண்டுவந்துச்சு, ரொம்ப நல்லா இருந்துச்சு"ன்னு. நல்லகண்ணு அய்யாவின் மனைவி ரஞ்சிதம் ஆச்சிக்கு என் மனைவி, குழந்தைகள் மேல் ரொம்பப் பிரியம். அவுங்க தவறினப்போ எங்க குடும்பத்துல ஒரு இழப்பாதான் நாங்க உணர்ந்தோம். இந்த பிறந்தநாளுக்கு என் மூத்த மகள் இல்லையேன்னு அவர் கேட்டார். என் மூத்த மகள் நக்கீரனின் வெள்ளி விழாவுக்கு உருவாக்குன நக்கீரன் சில்வர் ஜூபிலி வீடியோவைப் பார்த்துட்டு "பேத்தி பெரிய ஆளா வருவாங்க"ன்னு உச்சி முகர்ந்தார். அய்யா அவரது குடும்பத்தினர் பேரன், பேத்திகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ரொம்ப பாசமா இருப்பார். அவரது குடும்பத்தினரும் அதே பாசத்துடன் அவரை கவனிப்பவர்கள். 

இந்த முறை அவருக்குப் பிறந்த நாள் வந்த போதும் ஆவலோடு காத்திருந்து நான், என் மனைவி, இளைய மகள், என் தம்பி மகன்கள் அனைவரும் போய் அய்யாவைப் பார்த்தோம். அங்க இருந்த அவருடைய குடும்பத்தினரும் நாங்களும் ரொம்ப மகிழ்ச்சியா பேசிக்கிட்டுருந்தோம். இயல்பா பேசிக்கிட்டுருக்கும்போது 'நாம எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கலாமே'னு பேசினோம். அந்த ஃபோட்டோவில் அந்த தருணத்தின் மகிழ்ச்சி, பெருமை எல்லாம் அப்படியே உறைஞ்சுருக்கு. நல்லகண்ணு அய்யா காலத்துக்கும் நலமோடு வாழணும், அவரோடு நாங்களும் இருக்கணும். இது ஒரு சின்ன பேராசை" என்று நெகிழ்வான குரலில் நக்கீரன் ஆசிரியர் சொன்னபோது, அந்த புகைப்படத்தின் உள்ளே அன்பு, மரியாதை, பாசம், சமூக அக்கறை என அத்தனையும் பொதிந்திருப்பது நமக்குப் புரிந்தது. அத்தனை அழகாக அந்தப் புகைப்படம் அமைந்ததற்கு அவையே காரணம் என்று தெரிந்தது.

 

 

Next Story

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த சிவகுமார்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
sivakumar meets nallakannu

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின், “99 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவரது எக்ஸ் தள பதிவில், “விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவே கால் நூற்றாண்டுக் காலம் செயல்பட்ட எளிமையின் எடுத்துக்காட்டான தலைவர் தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் இன்று. 18 ஆம் வயதில் தொடங்கிய சிவந்த அரசியல் வாழ்க்கையை இந்த 98 ஆம் வயதிலும் தொடரும் பேராளர் ஐயா நல்லகண்ணு. தனக்கென்று ஒரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளாதவர்; தனக்கென்று ஒரு நிதியையும் எடுத்துக்கொள்ளாதவர்; அனைத்துமே தான் கொண்ட கொள்கைக்காகவும் தன் கட்சிக்காகவும் என்றே பெரும் தியாக வாழ்வு வாழும் தலைவருக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே சிவக்குமார் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சிவக்குமார் அவரின் காலில் விழுந்து ஆசியும் பெற்றுக்கொண்டார். 

Next Story

வளைந்த செங்கோலும்; சாதி அரசியலைத் தோலுரிக்கும் கழுவேர்த்தி மூர்க்கனும்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Nakkheeran Gopal Exclusive

 

சில நாட்களுக்கு முன் நடந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது எழுந்த சர்ச்சைகளும், சமீபத்தில் வெளியான சாதி அரசியலைத் தோலுரித்துக் காட்டும் கழுவேர்த்தி மூர்க்கனைப் பற்றியும் ஒப்பிட்டு நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது.

 

சமீபத்தில் நடந்த புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் தனது சனாதன கொள்கைகளைத் தூக்கிப் பிடித்தார் பிரதமர் மோடி என்பதற்கு அங்கு நடந்த கொடுமைகளே சாட்சி. அந்த விழா நடந்தது சாமியார் மடமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், சுதந்திர இந்தியாவில் முதலில் உருவான பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது, அன்றைக்கு இருந்த பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர், சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் அங்கிருந்து நமது இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாக்கினார்கள். ஆனால் நமது பிரதமர் மோடி, இந்தியாவில் சுற்றும் முக்கிய சாமியார்களை அழைத்து ஒரு விழா நடத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் ஒரு பிரதமராக இருக்கும் மோடி தான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவன், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்று அவ்வப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெட்டவெளிச்சமாகக் காட்டி வருகிறார்.

 

தமிழர்களை முட்டாளென நினைத்துக்கொண்டு தமிழர்களைப் பெருமைப் படுத்துகிறோம் என்று சோழர் காலத்து செங்கோல் என்று கூறி ஒன்றை வைத்துள்ளனர். உண்மையில் சொல்லப் போனால் அந்த செங்கோல் சோழர் காலத்து செங்கோலே அல்ல. அதாவது சுதந்திரம் கிடைத்த போது இந்தியாவில் உள்ள முக்கியத் தலைவர்களும் அன்றைக்கு இருந்த பிரதமர் நேருவை சந்தித்து மரியாதை செலுத்தும் விதமாகப் பொன்னாடை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்படித்தான் ஒரு ஆதினம் ஒரு செங்கோலை நேருவுக்கு கொடுத்து மரியாதை செலுத்தினார். அந்த செங்கோலை வாங்கிய நேரு அருகில் இருந்த உம்மிடி பங்காரு செட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த செங்கோலை வாங்கிய பங்காரு செட்டி இப்படி மாறி மாறி உருமாற்றி தற்போது பாராளுமன்றம் வரை சென்றுள்ளது. இது புரியாமல் இங்குள்ள அரைவேக்காடு தமிழர்களும் சங்கிகளும் தமிழர்களைப் பெருமைப் படுத்திவிட்டார் எங்கள் மோடி என்று தலைகால் தெரியாமல் குதித்து வருகின்றனர்.

 

அப்படி உங்கள் மோடிக்கு தமிழர்களைப் பெருமைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற மூன்று கல்வெட்டுகளில் ஒன்று கூட தமிழில் இல்லையே. மாறாக அந்த மூன்று கல்வெட்டுகளில் ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தான் உள்ளது. மேலும் திடீரென்று செங்கோலை தூக்கிக் கொள்வது ஏனோ என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் உருவானது தான் இது. இங்கிலாந்தில் உள்ள மன்னர் பதவி ஏற்கும்போதும் பொதுமக்களை சந்திக்கும் போதும் அவ்வப்போது ஒரு செங்கோலை தூக்கிக் கொண்டு செல்வார். எதற்காக என்றால் இது மன்னராட்சி, இந்த நாடு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மக்கள் மனதில் விதைக்கத் தான். அதைத்தான் மோடி அவர்களும் நிரூபிக்கிறாரோ என்ற கேள்விகளும் அவ்வப்போது மனதில் எழுகிறது. ஒரு நாட்டுடைய பிரதமர் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரை அழைக்காமல்... தான் ஏற்றிருக்கும் சனாதன கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டுக்குத் தெரிகிறது.

 

முந்தைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தை கூட இந்த சனாதன கொள்கைகள் அடிப்படையில் தான் அழைக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் 585 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றி தற்போது 888 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றியது தங்களை கேள்வி கேக்க ஆள் இல்லை என்ற மெத்தனப்போக்கு தான். இதை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் தற்போது நான் திரையரங்கில் பார்த்த நடிகர் அருள்நிதி நடித்து, இயக்குநர் கௌதம ராஜ் இயக்கிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் இருந்த சம்பவத்தை புதிய பாராளுமன்றத்தில் நடந்த கொடுமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஏனென்றால், ஒரு உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தாழ்ந்த சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் உள்ள நட்பை பிரிக்க, அரசியல்வாதி நடத்தும் சாதி அரசியலைத் தோலுரித்து இந்த படம் காட்டுகிறது. இந்த படத்தில் பல வசனங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் நடத்தும் மத அரசியலையும் சாதி அரசியலையும் சாட்டையால் அடிக்கிறது.

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், "எப்போதும் அடி வாங்குபவன் பக்கம் தான் இருக்க வேண்டும் அவனை அடிக்க விடாமல் பார்த்துக் கொள்வதற்காக", “மீசை என்பது ஆண்மையைப் பற்றியோ வீரத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியதோ அல்ல மாறாக அந்த மீசை என்பது வெறும் மயிறு தான்" என்ற வசனமும், "பதில் அளிக்க மட்டுமல்ல கேள்வி கேட்கவே அறிவு இருக்க வேண்டும்; நாங்கள் கேள்வி கேட்போமேயானால் எதிர்தரப்பினருக்கு பதில் கூற முடியாத அளவுக்கு இருக்கிறது” என்று ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அருள்நிதியின் நண்பரான சந்தோஷ் பேசியுள்ளார். இப்படி தமிழகத்தில் சாதி அரசியலையும் மத அரசியலையும் எதிர்த்து நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க, மக்களின் பொதுவாக இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், கேரளா ஸ்டோரி படத்தையும் புதிய பாராளுமன்றத்தின் விழாவில் ஹிந்து சாம்ராஜ்யம் நடத்தி தான் வேறுபட்ட மனிதர் என்று மனுதர்மத்தை தூக்கிப் பிடித்துள்ளார். மேலும் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவின் போது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நமது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்முறையைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் அந்த வீராங்கனைகளை அடித்து அராஜகம் நடத்தியுள்ளனர்.

 

பிஜேபி எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங், அங்கு இருந்த மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என அனைத்து பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் புதிய பாராளுமன்றத் திறப்பின் போது அந்த இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையின் அராஜகத்தால் அங்குள்ள வீராங்கனைகள் துன்புறுத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழக முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், "பாராளுமன்ற திறப்பின் போது இச்சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது; முதல் நாள் அன்றே செங்கோல் வளைந்து விட்டது" என்று கண்டித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.