Skip to main content

கொடூர விபத்து! -அதிர்ச்சியான இ.பி.எஸ். & ஓ.பி.எஸ்.!

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

மெகா கூட்டணி அமைந்துவிட்ட சந்தோஷத்தில், கூட்டணியின் தலைமைக் கட்சியான அ.தி.மு.க.வின் முன்னணியினரை விருந்துக்கு அழைத்தார் பா.ம.க.வின் நிறுவனரான டாக்டர். ராமதாஸ். சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடியும் மதுரையிலிருந்து புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திண்டிவனம் வந்தனர். அங்கே ஒரு மினி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட மந்திரியான சி.வி.சண்முகம். அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த எடப்பாடி, தி.மு.க.வை ஒரு பிடிபிடித்துவிட்டு, ""கடந்த தேர்தலில் அம்மாவுக்கு எப்படி வெற்றியைக் கொடுத்தீர்களோ, அதேபோல் இந்த முறையும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்'' என தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
pmkfest
கூட்டம் முடிந்து இரவு 9.25-க்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உட்பட அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், தைலாபுரம் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.வினரும் பா.ம.க.வினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். அந்த மோதலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினரான முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். சி.வி.சண்முகம் காருக்கு அடியில் படுத்து, மயிரிழையில் உயிர் தப்பினார்.

அப்போதிருந்தே சி.வி.சண்முகத்திற்கும் பா.ம.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தம்தான். அந்த பழைய பகை நினைப்பில்தான், அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் ஸ்டார் ஓட்டலில் கையெழுத்தானபோது, சண்முகம் அங்கு செல்லவில்லை. எனவே திண்டிவனம் பொதுக்கூட்டத்துடன் சரி, தைலாபுரம் விருந்துக்கு செல்வதில்லை என்ற முடிவோடுதான் இருந்தார் சி.வி.சண்முகம். ஆனால் எடப்பாடியோ "பழசு எதையும் மனசுல வச்சுக்காதீங்க, வண்டில ஏறுங்க' என சண்முகத்தை வற்புறுத்தி அழைத்ததன் பேரில் தைலாபுரம் தோட்டத்திற்குள் எண்ட்ரியானார் சி.வி.சண்முகம்.

முதல்வர் உட்பட கேபினெட்டே ஆஜராவதால், தோட்டத்தைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோட்டத்திலிருக்கும் விருந்தினர் வரவேற்பு அறைக்குள் இருபத்தைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்சியின் மற்ற முன்னணியினரின் கார்களை வெளியிலேயே நிறுத்திவிட்டதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி வரவேற்றனர் ராமதாஸும் அன்புமணியும். பழைய பகை மறந்த புது விருந்தினரான சி.வி.சண் முகத்துக்கு சிறப்பு வரவேற்பு தரப்பட்டது. பரஸ்பர நலவிசாரிப்புகள், சிறிது நேர அளவளாவல்களுக்குப் பின் விருந்து மண்டபத்திற்கு அனைவரும் சென்றனர்.

ஆம்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் தயாரான சிக்கன், மீன் வகையறாக்கள் உட்பட 80 வகை உணவுகள் ரெடியாக இருந்தன. அவற்றை இரு கட்சிகளின் முன்னணியினர் ஒருகை பார்த்தாலும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டாக்டர் ராமதாஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிட்டனர். கூட்டணி நல்லபடியாக அமைந்திருப்பதால் அசைவம் வேண்டாமே என ராமதாஸிடம் எடப்பாடி சென்டிமெண்டாக ஃபீல் பண்ணியதால்தான் சைவமாம். 55 நிமிடங்களில் நடந்து முடிந்த கோலாகல விருந்துக்குப் பின் எடப்பாடி உட்பட அனைவரும் இரவு 10.30-க்கு தைலாபுரம் தோட்டத்தைவிட்டுப் புறப்பட்டனர், வெளியில் காத்திருந்த ஏகப்பட்ட மீடியாக்களிடம் எதுவும் பேசாமல்.
pmkfest
அனைவரையும் வழியனுப்பிவிட்டு, இரவு 12 மணிக்கு மேல் விழுப்புரத்தில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார் எம்.பி. ராஜேந்திரன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது உதவியாளர் தமிழ்ச்செல்வனுடன் சென்னைக்குப் புறப்பட்டார் எம்.பி. ராஜேந்திரன். எம்.பி.யுடனேயே பகல் முழுவதும் பயணித்து, இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத் திருந்ததால், சரியான தூக்க கலக்கத்தில் இருந்தார் டிரைவர் அருமைசெல்வம். இதன் விளைவால்தான் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது கார் பலமாக மோதியதில், காரின் முன்பகுதி நொறுங்கி, டிரைவரின் அருகில் இருந்த எம்.பி.ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். டிரைவர் அருமை செல்வமும் எம்.பி.யின் உதவியாளர் தமிழ்ச்செல்வனும் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

22-ஆம் தேதி பொழுது விடிந்ததும் இந்த சோக செய்தியைக் கேள்விப்பட்ட இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் பதறியடித்து ஓடி வந்து ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தயவால் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஆகி, 2014-ல் எம்.பி.யு மானார் ராஜேந்திரன். வானூர் அருகே உள்ள அதனப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சாதுவான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் திவ்யா, தீபிகா என்ற மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் மரணத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் ஜெ. பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த கோரவிபத்து நடந்த இரண்டே நாட்களில், அதாவது 24-ஆம் தேதி, கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், காரில் போய்க் கொண்டிருந்த போது, தலைவாசல் அருகே, கார் தலைகுப்புற கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பியிருக்கிறார் காமராஜ். மேற்கண்ட இரு சம்பவங்களும் அ.தி.மு.க. தொண்டர்களிடையே ராங் சென்டிமெண்டை ஏற்படுத்தியதால் ஷாக்காகியுள்ளனர்.
 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.