Skip to main content

தொல்நடைப் பயணக் கையேடு வெளியீடு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

 marvelled at the 1200-year-old Kudaivari paintings

 

சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, “சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்லியல் சார்ந்த பொருட்கள், இடங்கள் பற்றி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்நடைப் பயணம் மேற்கொள்ளுதல், பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்துதல், உலகப் பாரம்பரிய நாள், வாரம் போன்ற விழாக்களைக் கொண்டாடுதல், அவ்வப்போது தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி செய்தியாக வெளியிடுதல், தொல்லியல் தலங்களுக்குப் பொது மக்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.  

 

தற்போது சிவகங்கை தொல்நடைக்குழு தொல்நடைப் பயணம் 4-ஐ  ஒருங்கிணைத்து குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், திருமயம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தொல்நடைப் பயணம் தொடங்குவதற்கு முன்பாக தொல்நடைப் பயண கையேடு வெளியிடப்பட்டது இக்கையேட்டை தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் முனீஸ்வரன் வெளியிட ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.

 

 marvelled at the 1200-year-old Kudaivari paintings

 

குடுமியான் மலையில் உள்ள இசைக் கல்வெட்டு மற்றும் ஏழாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில் அங்குள்ள பாண்டியர் கால கல்வெட்டுகள், சிகா நாதர் திருக்கோவில், நாயக்கர் கால வியத்தகு கற்சிலைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர். சித்தன்னவாசலில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை ஓவியங்களைப் பார்த்து அன்றைய நாளில் எளிய வண்ணங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக வரைந்த திறனைப் பார்த்து வியந்து போயினர்.

 

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகள், பாம்பினங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட காட்சிக் கூடங்களைப் பார்த்தும் அங்குள்ள டைனோசர் அசைவு மற்றும் ஒலிக் காட்சியைக் கண்டும் பிரமித்தனர். பின்னர் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட திருமயம் மலைக்கோட்டை, கோட்டையின் இடைப்பகுதியில் அமைந்துள்ள சிவன் குடைவரை, திருமயம் மலையில் தென்பகுதியில் அமைந்துள்ள ஏழாம் நூற்றாண்டு திருமால் குடைவரைக் கோவில். சிவன் கோவில் போன்றவற்றை கண்டனர். மேலும் அங்குள்ள கல்வெட்டுகள், இசை சார்ந்த கல்வெட்டு லிங்கோத்தவர் சிற்பம், சிவனுக்கு வாயிற்காவலராக நிற்கும் எமன் மற்றும் சித்திரகுப்தர் சிற்பங்களைப் பார்த்தும் மகிழ்ந்தனர். இந்த தொல்நடைப் பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தவுடன் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதில் சிவகங்கை தொல்நடைக்குழு தலைவர் சுந்தரராஜன், செயலர் இரா. நரசிம்மன், துணைத் தலைவர் முனீஸ்வரன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் முருகானந்தம், ஆசிரியர் முத்து காமாட்சி இந்திரா, ஈஸ்வரி, லோகமித்ரா ஆகியோருடன் 25 மாணவர்கள் உட்பட எண்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.