Skip to main content

இது என்ன புது புரளியா இருக்கு? சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா?

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

நேற்று இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 97 தொகுதிகளுக்கு நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி 1 தொகுதியிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
 

sundar pichai

 

 

வழக்கம்போல தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அவர்களுக்கான தகுந்த பூத்களில் சென்று தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.
 

பிரபலங்கள் வாக்கு செலுத்தியதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியதுபோல கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டிற்கு வந்து ஓட்டு செலுத்தியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் இது உண்மை என நம்பி சுந்தர் பிச்சையை பாராட்டினார்கள். 
 

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்  ‘சர்கார்’ என்று ஒரு அரசியல் படம் வெளியானது. அதில் விஜய் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்துகொண்டு வாக்குச் செலுத்துவதற்காக தமிழ்நாடு வருவார். இதைபோல கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் நேற்று நடந்த தேர்தலுக்காக தன்னுடைய வாக்கை செலுத்தினார் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். 

 

 

இது அனைவரும் வாக்குச் செலுத்த வாருங்கள் என்று மக்களுக்கு அறிவுரை செய்ய சரியாக இருந்தாலும் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்கு செலுத்தினார் என்பது தவறான தகவல் ஆகும். 
 

சுந்தர் பிச்சை என்னதான் தமிழ்நாட்டில் பிறந்த இந்திய பிரஜையாக இருந்தாலும் தற்போது அமெரிக்க வாழ் இந்தியராகதான் வாழ்ந்து வருகிறார். அதாவது அவருக்கு அமெரிக்காவில்தான் குடியுரிமை உள்ளது. இந்தியாவில் அவருக்கு குடியுரிமை இல்லை பின்னர், அவர் எப்படி இந்திய தேர்தலில் வாக்குச் செலுத்தமுடியும். 
 

சுந்தர் பிச்சை வாக்குச் செலுத்துவதற்காக வந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை இந்தியா வரும்போது ட்விட்டரில் பதிவிட்டது. 2017ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை இந்தியாவில் அவர் படித்த ஐஐடி கரக்பூர் கல்லூரிக்கு சென்றிருந்தார். அச்சமயத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, 24 வருடங்கள் கழித்து கல்லூரிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார். அப்போது 3000 மாணவர்களுடன் கலந்துரையாடலும் செய்தார் சுந்தர் பிச்சை.  1993ஆம் ஆண்டுக்கு பின் முதன் முறையாக ஐஐடி கராக்பூருக்கு சுந்தர் பிச்சை அப்போதுதான் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்களில் முடிவடைந்துள்ளன. மே 19ஆம் தேதி வரை மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களும் நடைபெற்று, மே23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.