Skip to main content

இந்திய அரசியலும்... வெங்காயம், தக்காளியும்..!

Published on 25/11/2021 | Edited on 27/11/2021

 

hj

 

இந்திய அரசியலில் வெங்காயம் செய்த அரசியல் என்பது மிகப்பெரியது என்பதை பலரால் நம்ப முடியாது. புதிய பிரதமர்களையும், முதல்வர்களையும் உருவாக்கிய உண்மையான ராஜகுரு நான்தான் என்று பலமுறை நிரூபித்துள்ளது வெங்காயம். அந்த நீண்ட நெடிய வரலாறை அறிய கிட்டதட்ட 40 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல வேண்டும். எமர்ஜென்ஸி தந்த வலியால் 1977ஆம் ஆண்டு நாடு மொராஜ் தேசாய் என்ற புதிய பிரதமரை உருவாக்கிய நேரம் அது. 500 நாட்கள் கடந்து ஆட்சி நிர்வாகம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், 79ஆம் ஆண்டின் இறுதியில் ஜனதாவில் பிளவு ஏற்படவே மொராஜ் சேதாய் பதவி விலகினார். புதிய பிரதமராக சரண் சிங் தேர்வானார். அதுவரை மக்களும், கூட்டணி கட்சிகளுமே பிரதமர்களைத் தீர்மானித்துவந்த நிலையில், முதல்முறையாக வெங்காயம் அரசியல் களத்தில் குதித்தது. அதுவரை சராசரி விலையில் விற்றுவந்த வெங்காயத்தின் விலை, தங்கத்தின் விலைபோல அதிரடியாக கூடியது.

 

சில நாட்களில் காட்சிகள் மாறும் என்று எதிர்பார்த்த அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது வெங்காயம். அனுதினமும் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்திற்குச் சென்றது. மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்தனர். பொறுத்தது போதும், பொங்கி எழு மனோகரா என்ற வசனத்தைப் போல பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களில் குதித்தார்கள். அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கையைப் பிசைந்தார்கள். இது ஒருபுறம் என்றால், 77ஆம் ஆண்டு அடைந்த தேர்தல் தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் இருந்த இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு வெங்காயத்தின் விலையேற்றமும், அதனை சந்திக்க முடியாமல் ஆட்சியாளர்கள் தவிப்பதும் அரசியல் ரீதியாக தங்களுக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாக பார்த்தனர். தங்களை மக்கள் முன் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு எதுவும் அமைத்துவிட போவதில்லை என்பதை உறுதியாக நம்பினர். 

 

ghj

 

களத்தில் குதித்தார் இந்திரா. ஏழைபாழைகளின் எளிய உணவான வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தக் கூட தகுதியில்லாத இந்த அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். இவரின் கேள்வி ஏற்கனவே விலை உயர்வால் வருத்தத்தில் இருந்த மக்களிடம் அரசுக்கு எதிரான கோபமாக மாறியது. வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலை மாறி வெங்காயத்தை வாங்கச் செல்லும் மக்களுக்கும் கண்ணீர் வரும் என்ற நிலைக்கு அன்றைய வெங்காயத்தின் விலை புதிய உச்சத்துக்குச் சென்றது. நான் வந்தால் வெங்காய விலை உயர்வு காணாமல் போகும் என்று சவால்விட்டார் இந்திரா. அன்றைய அரசியல் சூழலும் இந்திராவுக்கு சாதகமாக, ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக சரண் சிங் பதவி விலகினார். இந்திராவின் பேச்சை நம்பிய மக்கள் 80களில் வந்த பொதுத்தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வெற்றியைப் பரிசாகக் கொடுத்து மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரவைத்தனர். பிரதமர் பதவியில் அமர்ந்த இந்திரா, வெங்காய விலை உயர்வு சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிய வெங்காய முதலாளிகள் குடோன்களில் பதுக்கிய வெங்காய மூட்டைகளை சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். வெங்காய விலை உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. "மிசாவில் அரசியல்வாதிகளைப் பந்தாடிய இந்திரா, எங்களைத் தூக்கி வெங்காய குண்டர்கள் என்று சொல்லி உள்ளே போட எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது" என்று வெங்காய பதுக்கல்காரர்கள் வெளிப்படையாக கூறியதே வெங்காய விலை உயர்வுக்கு எது காரணம் என்று நாம் அறிந்துகொள்ள போதுமானது. 

 

இந்திய அளவில் வெங்காயம் இந்த அதிரடிகளை நிகழ்த்தியுள்ளது என்றால், தில்லி மாநில அரசியலில் வெங்காயம் ருத்ரதாண்டவம் ஆடியது என்றுதான் சொல்ல வேண்டும். 93ஆம் ஆண்டு தில்லி மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, தன்னுடைய முதல்வர்களை ஒருபுறம் மாற்றிகொண்டே வந்த நிலையில், வெங்காயத்தின் அதிரடி விலை உயர்வு அவர்களின் ஆட்சியையே மாற்றியது. காங்கிரஸ் கட்சிக்கும் வெங்காயத்துக்கும் என்ன நெருக்கமோ தெரியவில்லை, எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் சூழல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வெங்காயம் துணை நிற்கிறது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெங்காயம், தில்லி மாநில அரசிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தில்லி மாநில முதல்வராக இருந்த மறைந்த சுஷ்மா ஸ்வராஜிடம் இருந்த தில்லி மாநில ஆட்சியைப் பறித்த வெங்காயம், காங்கிரஸின் ஷீலா தீட்சித்திடம் மடைமாற்றியது. இவ்வாறு வெங்காயம் ஆடிய அரசியல் ஆட்டம் என்பது பொதுமக்களுக்கு இணையாக அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.

 

வெங்காயம் கண்ணீர் வர வைத்து என்றால், தற்போது தக்காளி கண்களில் ரத்தம் வர வைக்கிறது. அதிகப்படியான மழை, பருவநிலை மாற்றம் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு இருக்கிறது என்று இதற்கு ஆட்சியாளர்கள் காரணம் கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகள், “கிலோ 160க்கு தக்காளி விற்கிறது. எங்களிடமிருந்து 50 முதல் 60 ரூபாய்தான் கொள்முதல் விலையாகக் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் மீதமுள்ள 100 ரூபாயை யார் நிர்ணயம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசாங்கம்தான் உரிய பதிலைக் கூற வேண்டும். எங்களிடம் அடி மாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்கள், போதுமான அளவு பதுக்கிவிட்டு மீதியை தங்கத்தின் விலைபோல நினைத்த ரேட்டுக்கு விற்கிறார்கள். மழை பாதிப்பால் ஓரளவு வரத்து குறைந்துள்ளது என்பதை ஏற்கலாம். ஆனால், கிலோ 160 என்பது எல்லாம் செயற்கையாக நிர்ணயிக்கப்பட்ட விலையாக இருக்கிறது” என்கிறார்கள். வெங்காயம் அளவுக்கு தக்களிக்கு ‘பவர்’ இல்லை என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. ஆவன செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. 

 

 

Next Story

கேட்டாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

'Onion price that makes you cry'- Pmk Ramadoss alleges



வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டியதைப் போன்று  வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 150-ஐத் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

 

bb

 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாகச் சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடு முழுவதும்  வெங்காயத்தின்  விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.

 

வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ்வதற்குக் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

நடவு வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Increase in price of planting onions

 

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணைத் தொட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

 

ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்திருந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் பரிசு வழங்கும் அளவுக்கு அன்றைய காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது.

 

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் இருந்து பழைய சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பழைய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.