Skip to main content

"தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும்" - விஜய்யின் அரசியல் குறித்து சீமான்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

seeman about vijay politics entry

 

நடிகர் விஜய் படங்களைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

 

மேலும் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். அதோடு தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கும் மரியாதை செய்யும்படி உத்தரவிடப்பட்டதாக  புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்திருந்தார்.  நீண்ட வருடங்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேச்சுகள் அடிபட்டு வந்த சூழலில் விஜய்யின் இந்த முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் விஜய்யின் இந்த முயற்சிகள் குறித்து  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசினார். அவர் பேசுகையில், "அரசியலுக்கான முயற்சியைத்தான் என் தம்பி விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மாற்றுக் கட்சி என்பது அரை நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வரும்பொழுது இன்னும் வலிமையாக இருக்கும். ஒரு நபராக என்னால் எல்லாரையும் எதிர்த்து சண்டையிட முடியவில்லை. விஜய் வந்தால் இன்னும் ஆதரவாக இருக்கும். அதனால் அவர் வரணும். விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறார். அதற்கான முயற்சிகள் தான் அவர் இப்போது முன்னெடுக்கிற செயல்பாடுகள். நான் யாரையும் ஆதரிப்பதில்லை. தம்பி விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். எங்களுடைய இயக்கம் தனித்த ஒரு பேரியக்கம். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. எங்களுடைய மொழி சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது, நிலம், வளம், மலை, காடு அனைத்தும் பாதுகாக்க வேண்டும். சமமான தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்" என்றார்.  

 

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்