Skip to main content

"வீட்டைவிட்டு வெளியே போக பயப்பட்ட பிள்ளைகள் இப்போ..." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #11

Published on 16/11/2019 | Edited on 24/11/2019

விடிந்தும் விடியாமலும் வழக்கம்போல பக்கத்து வீட்டில் சப்தம், நான்கு மாதத்திற்கு முன்பு புதியதாக குடித்தனம் வந்தவர்கள் அக்குடும்பத்தினர். வயதான பெற்றோர் ஒரே மகள் என்று சின்ன குடும்பம் தான். காலை நேரமும் மாலை நேரமும் மட்டுமே அங்கே கூச்சல் களைகட்டும். மற்ற நேரங்களில் எல்லாம் அமைதிப் பூங்காவைப் போல காட்சியளிக்கும். பிளாட் சிஸ்டம் என்றால் பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாது அதனால் இம்மாதிரி அக்கம் பக்கம் குறைச்சலான வீடுகள் இருந்தால் நமக்கும் பாதுகாப்பு என்று என் கணவர் வாங்கிப் போட்டது. இப்போது என் தனிக்குடித்தனத்திற்கு உதவுகிறது. வந்த முதல் நாள் மளிகை, கேபிள் என சகலத்திற்கும் உதவி கேட்டு வந்து நின்றவர் அந்த வீட்டம்மா, அதன் பிறகு மகள் இருக்கும் போது அதிகம் பேசுவதில்லை, அவள் முகத்தினை அவ்வளவாக நான் பார்த்ததே இல்லை, வெளியே தெருவ போகும் போதுதான் அந்த பெண் வீட்டை விட்டு வருவாள் அதுவும் முகம் முழுவதையும் மறைத்தபடி தன் ஸ்கூட்டியில் அமர்ந்ததும் லன்ஞ் பாக்ஸ், கண்ணாடி, தண்ணீர், குடை, ஹெல்மெட் என்று வாசலில் நின்று வழியனுப்ப வரும் அந்தம்மாள்.

 

yi



பத்திரமா போயிட்டு வாம்மா என்ற அவரின் குரல் மகளை எட்டுவதற்குள் அவள் அடுத்த தெருவிற்றே பறந்திருப்பாள் அத்தனை வேகம். சில நேரம் அந்த வீட்டிற்கு சில ஆண்பிள்ளைகள் வருவது உண்டு. நம்ம வீட்டு மொட்டை மாடியில் நின்றால் அவர்கள் வீட்டு மாடியும் கொல்லையும் தெரியும் ஒற்றைக் கல் சுவர் என்பதால் சில நேரம் பேசுவதைக் கூட என் அறையில் இருந்தபடியே கேட்டு இருக்கிறேன். அவளுக்குத்தான் சப்தமில்லாமல் பேசத் தெரியாது.  முதல் நாள் பேச்சின் சாரம் இதுதான். அந்த பெண் தன் ஆண் சிநேகிதர்களுடன் பிக்னிக் போகப்போவதாக சொல்ல தந்தை போகக் கூடாது என்று கண்டிக்க, போராட்டம் வெடித்தது, அவளின் எல்லைமீறிய கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டு வீடே இரண்டாகிக் கொண்டு இருந்தது.  வேளச்சேரியில் இருந்து என் வீட்டுக்கு அப்போதே வந்த ஒன்றுவிட்ட தங்கை காமாட்சி, அவர்களைக் கண்டதும் சரியாப் போச்சு இவங்க இங்கதான் இருக்காங்களா என்று இழுத்து கேள்வியெழுப்ப எனக்கு பக்கத்துவீட்டு அம்மாவைப் பற்றி அறியவேண்டும் தோன்றியது. ஆமாக்கா ஒரு நாலைந்து மாசம் இருக்கும் இவங்களை உனக்கு தெரியுமா ?! பேஷா தெரியும். ஒரு அடங்காபிடாரி இருக்குமே அங்கே? யாரைச் சொல்றே?

அதான் காவேரியோட பொண்ணு அந்தம்மாளின் பெயர் காவேரி என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. தலையசைத்தேன் என்னத்தை சொல்ல இவங்க சொந்த ஊரு கும்பகோணம் நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பம் நொடிச்சிப் போச்சு இரண்டே பொண்ணுங்க மூத்த பொண்ணு யாரையோ கூட்டிட்டு ஓடிட்டதா பேச்சு, இப்ப இருக்கிறது சின்னவ, கேம்பஸ் இண்டர்வீயூலே பெரிய கம்பெனியிலே வேலை கிடைச்சதால சென்னைக்கே வந்திட்டாங்க. நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேதான் இருந்தாங்க. விடிஞ்சா அடைஞ்சா சண்டைதான். அதிலும் அந்தப் பொண்ணு கத்தறதைப் பார்த்தா சில நேரம் யாரு பெத்தவங்கன்னே எனக்கு சந்தேகம் வந்திடும். வந்த இரண்டு மூணுமாசம் நல்லாத்தான் இருந்தா, வீட்டுக்கு அடக்கமா ஆனா போகப்போக அவளோட பாக்கத்தில் மாற்றம் தெரிந்தது. உடம்பு வெளியே தெரியறாமாதிரி டிரஸ் பண்றதும், கண்ட கண்டவங்களோடு வண்டியிலே போறதும், லேட்டா வீட்டுக்கு வர்றதுன்னு ஏகப்பட்ட குளறுபடி. புத்தி சொன்ன அம்மாவை விரோதியாப் பார்த்தா? பெரியவங்க இரண்டு பேருக்கும் வருமானம் இல்லை, சோத்துக்கும், துணிக்கும் இவளை எதிர்பார்க்கிற நிலைமை மகளின் கொடி பறந்தது. 

 

 

k



முதல்ல வேலைக்குப் போய் சம்பாரிச்சுப் போடற பொண்ணாச்சேன்னு அவளோட உள்ளாடைகளைக் கூட இவதான் துவைச்சி போடுவாங்க ஏதோ சர்வாதிகாரியிடம் கைகட்டி நிற்பதைப் போல சொந்த மகளிடம் அந்தம்மாள் ஏன் பயப்படவேண்டும். எங்கள் வீட்டு மாடியில் இருந்து பார்த்தாளே அவரின் வீடு கொல்லைப் புறம் தெரியும். சில நேரங்களில் மகளுக்கு வெந்நீர் கொண்டு வந்து ஊற்றிவிட்டு, விளாவி அவளுக்கு சோப்பு டவல் முதற்கொண்டு எடுத்துக் கொண்டு ஓடுவதை நானும் பார்த்திருக்கிறேனே  பாவம் இல்லைக்கா....

ம்.. எல்லாம் இவங்க பேரிலேயேயும் தப்பு இருக்கு ஆனந்தி. என்னதான் படிக்கவைச்சாலும் பிள்ளைங்களுக்கு வேணுங்கிறதை காலாகாலத்திலே செய்திடணும் இல்லை, பெரியவ ஓடிப்போன போதே இவளுக்கு ஒரு பையனைப் பார்த்துக் கட்டி வைச்சிருக்கணும். ஆனா காலக்கொடுமை இந்தப் பொண்ணோட உழைப்பிலே உட்கார்ந்து சாப்பிடறதா இருக்கு. இப்போ அவளுக்கு 60ஆயிரத்து மேல சம்பளம் வாடகை, மளிகைன்னு மத்த செலவுகள் போக வீட்டு செலவுக்கு 5000 ஆயிரம் தருவா அதுக்குள்ளே குடும்பத்தை நடத்திக்கணும். இந்தமாதம் அவருக்கு மருத்துவ செலவு அதிகமாயிட்டு, மேற்கொண்டு நாள் தவறாம மாத்திரைமருந்து, அவரோட உடம்பைத் தேத்த சாப்பாடு செலவு கொஞ்சம் கைமீறி போச்சு. எல்லாத்துக்கும் அவ கையை எதிர்பார்த்துட்டு இருக்கிறோமேன்னு அசிங்கமா இருக்குன்னு அவங்க சொல்லி ரொம்ப வருத்தப்படுவாங்க. ஆனா அவ முன்னாடி பேசக்கூட பயப்படும் போது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பெத்தவங்களைப் பார்த்துக்கிறது பிள்ளைகளோட கடமைதானே அக்கா.

வீட்டைவிட்டு வெளியே போக பயப்பட்ட பிள்ளைகள் இப்போ பொருளாதார சுதந்திரம் அவங்க கையிலே கிடைச்சதும் யாரையும் மதிக்கணுமின்னு நினைக்கிறது இல்லை, சிலர் தான் இப்படி அதுல இவ ஒரு ரகம். படிக்க வைச்சு ஆளாக்கி விடற பிள்ளைகளை பாரமா நினைக்கிறாங்க பிள்ளைங்க அதுங்களுக்கு பயந்துட்டு பெத்தவங்களும் சகிச்சிகிட்டு கிடக்கிறாங்க. அக்கா கிளம்பவும் எனக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரம்மாவைப் பார்க்க கவலையாய் இருந்தது.  மறுநாள் காலையிலேயே அவர்கள் வீட்டில் போடும் சப்தம் வெளிவாசல் வரை என் இஷ்டம் நான் அப்படித்தான் செய்வேன் இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருப்பதானால் இங்கே இருங்கள் இல்லைன்னா பணத்தைக் கட்டி முதியோர் இல்லத்திலே சேர்த்து விட்டுடறேன். அங்கே போய் தங்கிங்கோங்க.  நான் இப்போ என்னம்மா தப்பா சொல்லிட்டேன். ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டுலே நிறைய ஆண் நண்பர்கள் வந்திருந்தாங்கன்னு தானே காலி பண்ணினோம். நீ சின்ன பொண்ணு இன்னைக்கு நாம செய்யற தப்பு நாளைக்கு பெரிய சிக்கலை உண்டு பண்ணும். அம்மா சொல்றதைக் கேளும்மா, இங்கேயும் நாலு பேர் பார்க்க வெளியே நின்று நேரங்கெட்ட நேரத்திலே பேசுறே.
 

b



இதாபாரு நாலு பேரு பாக்கிறதுக்காக எல்லாம் என்னால வாழ முடியாது நான் படிச்சிருக்கேன், என் சொந்தக் கால்ல நிக்குறேன். இப்போ நீயும் உன் புருஷனும் கூட என் நிழல்லதான் இருக்கீங்க என் வாழ்க்கையைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் உனக்கில்லை. எப்படி கல்யாணம் செய்துக்கணும் யாரைக் கல்யாணம் செய்துக்கணுமின்னு எனக்குத் தெரியும். உன் வேலையைப் பாரு நாளைக்கு லீவு பிக்னிக் போகப்போறேன் என் நண்பர்கள் கூட, இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டேன் இதோ இவருக்கு உடம்புக்கு முடியலையேன்னுதான் சொல்லிட்டுப் போறேன். மாடியிலே என் அறையிலே 1000ரூபாய் பணம் வச்சிருக்கேன் செலவுக்கு. வேறு ஏதும் பேச வேண்டியது இல்லை என்பதைப் போல சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பெண்ணின் இருசக்கர வாகனம் புறப்படும் சப்தம் கேட்டது. சோகச் சித்திரமாய் அந்தம்மா கதவோரம் சாய்திருந்தார்.