Skip to main content

உன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை! - ஆட்டோசங்கர் #16  

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

auto sankar 16 title



"எனக்கென்ன வந்துச்சு? அவரு ஏதோ ஒரு நடிகையைத்தான் கேட்டாரு... ஏழாயிரம் கொடுத்தேன்னா... சரிதான்னு அந்த கருப்பாயி   வந்துட்டுப் போறா...! சாந்தின்னு ஒருத்தி இருக்கவே இருக்கிறா! எனக்கொன்னும் நஷ்டமில்லை...'' - கார் நோக்கிப் புறப்பட்ட என்னைத் தடுத்தாள் அம்மா!

"இருப்பா!'' என்றவள் உள்ளேயிருந்து பணம் கொண்டு வந்து நீட்டினாள். வாங்கி பையில் வைக்க "நீ உருப்படவே மாட்டே!'' என சபித்தாள். மீண்டும் சிரித்தேன் .

"தேங்க்யூ'' என்றபடி தலைவரின் ராயப்பேட்டை ஸ்டார் ஹோட்டலின் அறை எண் சொன்னேன்.

 

 

 


பெண் அம்மாவை முறைத்தது "வல்லிய இடம் தன்னே இது! அது கொண்டாக்கும் ஞான்...!? நீ போய்க்கோ மோளே! உனக்கு ஒந்நும் தெரியாது...!'' என சமாளித்தார்.

"அம்மா எங்களுக்கு வகுப்பு எடுத்தே நீ... உனக்கு வகுப்பு நடத்திட்டார் பாரு இந்த ஆளு...''

"சரி... சரி... டயமாகுது! சீக்கிரம் புறப்படுங்க; அதான் எல்லாத்தையும் சேர்த்து வச்சு அவர்கிட்டே கறக்கப்போறீங்களே   அப்புறம் என்ன?'' என்றேன் நான்.

கார் அரை மணியில் ஹோட்டலை அடைந்தது. நடிகை பின் தொடர லிஃப்டில் மாடி ஏறி அறை கதவைத் தட்டினேன். "ஐயா! ஐயா!''

கதவு மெல்ல திறக்க தூக்கக் கலக்கத்துடன் வெளிப்பட்டார் அந்த கதர் உடைத் தலைவர். தலையில் ஏகமாய் வெள்ளை ரோமங்கள்! 

"வாம்மா'' என்றார்.

 

அதன் பின் அங்கு நமக்கென்ன வேலை...? 

 

book Ad



பின்னொரு நாள்...

தேவியைப் பார்த்ததும் என்னை ஆச்சர்யம் அப்பிக்கொண்டது. திருநீர்மலையிலிருந்து நான் ஆட்டோவில் சாராயம்   கடத்த உதவி செய்தாளே... அதே பெண்... அவளை அவ்வப்போது சாராயக் கடத்தலுக்கு உபயோகித்துக்கொண்டது உண்மை. ஆனால்... அவளிடம் விலாசம் எதுவும் சொல்லிவிட்டு வரவில்லை நான். பின்னே எப்படி...?

"ரொம்ப சுலபம்'' சிரித்தாள் தேவி.
 

"உங்க ஆட்டோவில் ரெண்டு மூணு தடவை வர்றப்ப, உங்ககிட்டே மாமூல் வாங்கற போலீஸ்காரங்க என்னைப்   பார்த்தாங்களா...?! அதுக்கப்புறம் ரொம்ப நாளா நீங்க வரலைன்னதும் கவலையோட என்னை விசாரிக்க   ஆரம்பிச்சிட்டானுக, நமக்குள்ள அதிக பழக்கம்  கிடையாதுன்னு சொன்னால் நம்பினாதானே? அப்புறம்   அவங்ககிட்டேயேதான் விலாசம் வாங்கிட்டு வந்தேன்!''

"இங்கே எதுக்கு வந்தே?''

 

 

 


தேவி தரையை வெறித்தாள். வாழ்க்கை வறுமையின் ராட்சதப் பிடியில் இருப்பதை வருத்தக் குரலில் சொன்னாள். தானும் தனது தம்பி வெங்கடேசனும் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டுமென்றாள்.

"ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் எனக்கு உதவியவள்… பாவம்” என்று இரக்கமாயிருந்தது.

"சரி... உன் தம்பியை என்கிட்டே அனுப்பு! அவன் வருமானத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீ தொடர்ந்து தையல் படி... ஒரு   நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கிறேன்... சந்தோஷம்தானே?''

"ஓ...'' என்றாள் சந்தோஷம் இல்லாமலே.

 

 

auto sankar 16 devi



அப்புறம் ஒரு நாள்... பராமரிப்பில் மெள்ள மெள்ள தேவி தலையெடுக்க ஆரம்பித்த சமீபம். திடீரென ஒருநாள் அவள் கையில் "கௌரிசங்கர்” என்ற பெயரை தேதியுடன் சேர்த்து அவள் பச்சைக் குத்திக்கொண்டு வந்தாள். ஆத்திரத்தில் அவளைக் கூப்பிட்டு வேகத்துடன் உறுமினேன்.

"யாரைக் கேட்டு கையிலே பச்சை குத்திகிட்டே...?''

"இ... இல்லைங்க. சுமதியெல்லாம் குத்தியிருக்குதில்ல... அதனாலதான்...'' -குரல் தழுதழுத்தது.

"இதென்ன அண்ணா தி.மு.க.ன்னு நினைச்சியா... இயக்கத்திலே இருக்கிற எல்லாரையும் பச்சை குத்தச் சொல்றதுக்கு... அறிவுகெட்ட முண்டம்...'' என ஆரம்பித்து வார்த்தைகளில் பச்சைமிளகாய் சேர்த்துத்திட்ட அவளுக்குக் கண்கள்   அலம்பிற்று. தவிர, சுற்றிலும் இருந்த ஜனங்களின் பார்வையில் தென்பட்ட கேலி மனசை காயப்படுத்திற்று.
என்னிடம் சொல்லாமற் கூட கோபித்துக் கொண்டு போய்விட்டாள் தேவி.

கோடம்பாக்கத்தில் கேசவன் என்பவனைக் கல்யாணம் செய்துகொண்டு அவள் வசித்து வருவதாக ஓரிரு நண்பர்கள் சொன்னபோது அலட்சியப்படுத்தினேன்.
 

"ஓடுகாலி...! சொல்லிக்காம ஓடிப்போனவதானே!'' -மனசுள் முனகிப் பார்க்க... செல்லாமலே இருந்துவிட்டேன். ரெண்டுபேரும் சென்னாரெட்டியும்- ஜெ.யும் மாதிரி வெட்டி வீம்பில் சந்தித்துக் கொள்ளவில்லை.

சில வருஷங்கள் கழித்து மிக தற்செயலாக மறுபடி தேவியை மவுண்ட் ரோட்டில் சந்தித்தேன். இதயத்தை ஒரு டஜன் இடி ஒரே சமயம் தாக்கியது. ஆடிப்போனேன்.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

முந்தைய பகுதி:

இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15  
 

 

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.