Skip to main content

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

Published on 29/09/2018 | Edited on 30/09/2018
auto sankar 19

 

வெறும் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறடி உயர மனிதனையே ஆபத்தில் தள்ளிவிடுகிற வல்லமை பெற்றது! ரவிக்கும் ஆபத்தைத் தந்தது, அந்த நாக்குதான்! சுடலை விஷயத்தில் மறைந்திருக்கும் சிதம்பர ரகசியத்தை அறியத் துடித்தவன், ஒரு நாள் சிவாஜியிடம் கேட்டேவிட்டான்.

"சுடலையைக் கொலை பண்ணினீங்களே.... ஏண்ணே!'' என ரவி கேட்டதும் சிவாஜி மனசுக்குள் ஒரு "திக்' வாங்கினான். மார்பில் முயல் உதைத்தது. பளிச்சென்று நிமிர்ந்தான். கண்களை இடுக்கிக் கொண்டு ரவியைப் பார்த்தான்.

"என்னடா கேட்டே?'' -மெலிதான குரலில் அழுத்தமாய்க் கேட்க ரவி எச்சில் விழுங்கினான்.

"இ... இல்லேண்ணே! சுடலை என்ன தப்பு பண்ணினாரு. எதுக்காக கொ...லை... பண்ணினீங்க...ன்னு...''

அதிர்ச்சியை ஒளித்துவைக்க இதயத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இடம் தேடினான் சிவாஜி.

"என்னடா சொல்றே? சு...சுடலையைக் கொலை பண்ணினேனா... நானா?''

ரவி மரியாதை சேர்த்து சிரித்தான். "உங்களை மட்டும்  சொல்லலைண்ணே... நீங்க எல்லாருமா சேர்ந்துதான்...''-  கூடிய மட்டும்   எச்சரிக்கையாகப் பேசினான் ரவி.

"என்னடா பேமானி... இன்னா தெனாவெட்டு இருந்தா, இப்படி ராங்கா டயலாக் உடுவே...'' -சிவாஜியின் முகம் உக்கிரமானது.

"சொல்ரா... எத்தை வச்சு சுடலைப் பயலுக்கு நாங்க சங்கு ஊதினோம்னு பினாத்துவே... அவனை எத்தினி நாளா தேடிக்கினு இர்க்கோம்! தெர்யாது?'' -ரவியின் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றினான்.

முதலில் பயந்தாலும் சிவாஜி தன் சட்டையைப் பற்றினதும் தனது வம்ச குடிப்பெருமையே(!) இதில் சேதமடைந்ததுபோல் ஒரு கோபம் கிளம்பிற்று   ரவிக்குள்! கொலையும் செய்துவிட்டு தன்னையும் இவன் அவமானப்படுத்துவதாவது... இவர்களது குடுமியே தன் கையில் சிக்கியிருக்கும்போது,   தன் சட்டையைக் கேவலம் இவன் பிடிப்பதாவது!

பொறுமையின் கடைசிப் படிக்கட்டில் நின்றுகொண்டு அமைதியாக "முதல்ல சட்டையிலிருந்து கையை எடுங்க...''

"முடியாது'' என்றான் சிவாஜி. அவன் சொன்ன அபாண்டத்துக்கு விளக்கம் தரும்வரை விடப்போவதில்லை என தீர்மானமாகச் சொன்னான்.

"சரி... சொல்றேன்! ஒவ்வொன்றா கேட்டுக்குங்க. சுடலை கொடுத்ததா நூறு ரூவா கொடுத்தீங்களே... நான் சுடலைக்குப் பணம்   கொடுக்கவேயில்லை! உங்க கிட்ட பொய் சொன்னேன்.   உபத்திராவும் நானும் எப்பவோ போலீசுக்குப் போயிருப்போம். சரி பழகிட்டோம்னு சமாதானமா கேட்டா, என்னை என்ன கேனயன்னு   நினைச்சுட்டீங்களா? சுடலை மட்டுமில்லை. லலிதாவைக் கொலை பண்ணி புதைச்சதும்கூட தெரியும் எனக்கு...!''

சிவாஜி விக்கித்துப் போய் நின்றான். சட்டையைப் பிடித்திருந்த கைகள் தானாகவே தளர்ந்தது. முகம் பூராவும் முத்து முத்தாய் வியர்வை பூத்தது.

"ஹ...ஹ... என்னடா என்னென்னவோ சொல்றே...?'' -அசட்டுச் சிரிப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

"அண்ணே! இந்த வேலையெல்லாம் நம்மகிட்டே வேணாம். இப்ப போலீசுக்குப் போய் சொன்னேன்னா போதும். ம்ஹும்! நம்ம சரகத்திலே   சொல்ல மாட்டேன். இங்கே இருக்கிறவுக போலீஸ்காரனுகளா... பொம்பிளை விபச்சாரிகளை வச்சிருக்கீங்களே... அதேமாதிரி அவனுக உங்களோட ஆம்பிளை வேசிங்க! புகார் கொடுத்தா என்னை கைமாப் பண்ணிடுவானுக, எனக்குத் தெரியாதா? அதனாலே நேரா கமிஷனர்கிட்டேதான் போவேன்.''
 

auto sankar 191



சிவாஜிக்கு பகீர் என்றது. ரவியின் மேல் அடங்காத ஆத்திரம் பிறந்தது. குழம்பு கக்கின இதய எரிமலையில் பொறுமை என்னும் தண்ணீரை ஊற்றி ஊற்றி தன்னை அடக்கிக் கொண்டான். மெள்ள சிரித்து சிநேகத்துடன் ரவியின் தோளில் கை போட்டான்.

"த பாரு... இப்ப இன்னா நடந்துச்சுன்னு டென்ஷன் ஆவுறே... ஒனிக்கு இன்னா வேணும்... அத்த சொல்லுவியா... ஹாங்!''

"ம்..ம்.. அப்படி வாங்க வழிக்கு! நான் ஒண்ணும் அதிகமா கேட்டுரல... ரெண்டே ரெண்டு லட்ச ரூபாதான். சுடலைக்கு ஒண்ணு! லலிதாவுக்கு ஒண்ணு! அதை மட்டும் கொடுத்துட்டா எங்கேயும் வாய் திறக்க மாட்டேன்.''

அவன் சொன்னதும் சிவாஜிக்கு முகத்தில் ரத்தம் தப்பித்தது. கண்கள் செந்தூரம் காட்டினது. ரவியைப் பார்த்து ஒரு இன்ச் புன்சிரித்தான். கைகள்  வேட்டியின் மடிப்புக்குள் இருந்த பட்டன் கத்தி நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. ரவி ஆபத்து உணராதவனாக சவடால் அடித்துக் கொண்டிருந்தான்.

"பணத்தை கொடுத்துட்டீங்கன்னா கண் மறைவா எங்கேயாவது போயிர்றேன். இப்பல்லாம் வேலை செய்யவே   பிடிக்கமாட்டேங்குது. நாலைஞ்சு ஆட்டோவை வாங்கி வாடகைக்கு விட்டுரலாம்னு பார்க்கிறேன். பணம் தரலேன்னு வைங்க... குடிபோதையில   நான் பாட்டுக்கு யார்கிட்டேயாச்சும் இதை உளறி வைப்பேன்!''

அவன் சொல்லச் சொல்ல பேசாது கேட்டுக் கொண்டிருந்தான் சிவாஜி! மௌனத்தையும் சேர்த்து இப்போது அவனிடம் இரண்டு ஆயுதம்.

"நீங்களே யோசிச்சுப் பாருங்க! நான் ஒண்ணும் அதிகமா கேட்டுரலை... இல்லே?'' -பேச்சு சட்டென பாதியில் நின்றது. சிவாஜியின் கையிலிருந்த ஆயுதம் கண்டு கண்களில் சாவு பயம் தொற்றிக் கொண்டது.

சிவாஜியின் பட்டன் கத்தி எவர்சில்வர் கோட்டிங்குடன் டாலடித்தது. ரத்தப்பசியுடன் ரவியைப் பார்த்து "ஹலோ" என்றது.

முந்தைய பகுதி:

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

 

book ad

 

 

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.